பதிவு செய்த நாள்
16
ஜூலை
2013
10:07
காஞ்சிபுரம்: பழமையான கோவில்களை புனரமைக்கும் பணி, கருங்கற்கள் பற்றாக்குறையால் சிக்கலாகி உள்ளது. உள்ளூர் கற்கள் பயன்படாத நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 1,195 கோவில்கள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான கோவில்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அடுத்தடுத்து நடந்த படையெடுப்புக்களாலும், இயற்கை சீற்றங்களாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் பல கோவில்கள் சிதிலமடைந்து உள்ளன. இதையடுத்து, கோவில்களை, அவற்றின் பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவு செய்த இந்து சமய அறநிலையத் துறை, நன்கொடையாளர்களின் உதவியோடு, அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. திருப்பணிகள் தற்போது, காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில்களில், தலா 2 கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடந்து வருகிறது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், நன்கொடையாளர்கள் பங்களிப்பு 1.5 கோடி ரூபாய், ஆணைய பொதுநல நிதி 50 லட்சம் ரூபாய் என, 2 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. கோவளம், கைலாசநாதர் கோவில், புத்திரன்கோட்டை, அகஸ்தீஸ்வரர் கோவில் ஆகியவை தலா, 25 லட்சம் ரூபாய் செலவிலும், உத்திரமேரூர் கேதாரீஸ்வரர் கோவில், 48 லட்சம் ரூபாய் செலவிலும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், திருப்போரூர் கந்தசுவாமி கோவில், நன்கொடையாளர் பங்களிப்பு தொகையான, 1.5 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தொய்வு: இக்கோவில்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன், கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டவை. அக்கால சிற்பிகள், கருங்கல், வெண்பாறை, முரட்டுபாறை, மணற்பாறை ஆகியவற்றை தேர்வு செய்து, பின், ஆண் பாறை, பெண் பாறை என, பிரித்து, இணைப்பு துவாரங்கள் ஏற்படுத்தி, கற்களை பிணைத்து, சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் கொண்ட கலவையால், உறுதிபட உருவாக்கினர்.இந்நிலையில், சிதிலமடைந்துள்ள நூற்றாண்டு கோவில்களை, அவற்றின் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட கருங்கற்கள் கிடைக்காமல், புனரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சிற்ப சாஸ்திரம்: இதுகுறித்து, ஸ்தபதி நந்தகுமார் கூறுகையில், ""சிற்ப சாஸ்திரத்தில், கோவில்களை வடிவமைக்க பயன்படுத்த வேண்டிய கற்கள் குறித்து விதிமுறைகள் உள்ளன. இதுபோன்ற கற்கள், வாலாஜாபாத் அடுத்த சங்காரபுரம், பட்டிமலக்குப்பம் உள்ளிட்ட மலைகளில் காணப்படுகின்றன. கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால், பாறைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, அக்கற்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, என்றார். மேலும் அவர் கூறுகையில், ""தற்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து, கற்களை எடுத்து வந்து புனரமைப்பு பணிகளை செய்ய வேண்டி உள்ளது. இந்நிலையில், சிற்பங்களை வடிவமைக்க பயன்படும் பாறைகளை கொண்ட மலைகளை ஒதுக்கீடு செய்து, கனிம வளத்துறை நடவடிக்கை எடுத்தால், பழைய கற்கோவில்களை புனரமைப்பது என்பது எளிமையாக இருக்கும் என்றார். இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில்,""கோவில் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடக்க, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, ஒரு கனஅடி, 350 ரூபாய் என, விலை கொடுத்து, வாங்கி வரப்படுகின்றன, என்றார்.