பதிவு செய்த நாள்
17
ஜூலை
2013
10:07
திருப்பதி: திருமலையில் கிடைத்த பைபிளால், மத பிரசாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருமலையில், தேவஸ்தானத்திற்கு சொந்தமான, கவுஸ்துபம் விருந்தினர் மாளிகையில் உள்ள, பாலாஜி பவன் ஓட்டலுக்குப் பின்புறம், ஒரு பைபிள் கிடைத்தது. ராஜமுந்திரியில் இருந்து, ஓராண்டிற்கு முன், ஒப்பந்த ஊழியர்களாக, அச்சுராஜு, 25, சத்தியவதி, 22, ஆகியோர் வந்தனர். இவர்களின், ஐந்து வயது குழந்தை ஷைலா. இரண்டு நாட்களுக்கு முன், ஓட்டலுக்குப் பின்புறம், குழந்தை ஷைலா, பைபிள் புத்தகத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அதைக் கண்டவர்கள், தேவஸ்தானத்திற்கு தகவல் கொடுத்தனர். தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், குழந்தை ஷைலாவிடம் விசாரித்ததில், அங்கு கிடந்த புத்தகத்துடன் விளையாடியதாகக் கூறினாள். அவளது பெற்றோரிடம் விசாரித்ததில், அவர்களுக்கு அதுகுறித்து எதுவும் தெரியவில்லை. கடந்த, 2007ம் ஆண்டு, அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஆட்சிக் காலத்தில், ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதில், "திருமலையில் அன்னிய மத பிரசாரம் செய்யக்கூடாது; மீறினால், தண்டிக்கப்படுவர் என்று கூறப்பட்டது. தற்போது, திருமலையில், பைபிள் கிடைத்துள்ளதால், திருமலைக்கு, மத பிரசாரம் செய்ய, கிறிஸ்தவர்கள் யாராவது வந்தனரா அல்லது வேறு யாராவது போட்டுச் சென்றுள்ளனரா என, விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
திருமலை ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.3.19 கோடி வசூல்
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், கடந்த, ஞாயிற்றுக் கிழமை காலை முதல் திங்கட் கிழமை காலை வரை, உண்டியல் காணிக்கை மூலம், 3.19 கோடி ரூபாய் வசூலானது. வார இறுதி விடுமுறை நாளில், திருமலை கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவதுண்டு. இதனால், உண்டியல் காணிக்கையும் அதிகளவில் வசூலாகும். கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை முதல், திங்கட் கிழமை காலை வரை, வசூலான காணிக்கையை எண்ணியதில், 3.19 கோடி ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
புதிய கோசாலை துவக்க தேவஸ்தானம் முடிவு
திருமலை ஏழுமலையான் கோயிலில், கோ சேவா நீராஜனம் என்ற பெயரில் கோசாலை அறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், பசு பாதுகாப்பு மையத்தை நிர்வகித்து வருகிறது. அங்குள்ள பசுக்கள் அளிக்கும் பால், ஏழுமலையானின் தினசரி கைங்கர்யம், பிரசாதம் தயாரிப்பு, திருப்பதியில் உள்ளூர் கோயில்கள், அன்னதானம். இலவச பால் வழங்குதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதிகளவில் பால் தேவைப்படுவதால், மற்றொரு கோ சாலை அறக்கட்டளையை, தேவஸ்தானம் துவக்க முடிவு செய்து அறிவித்துள்ளது. இந்த அறக்கட்டளைக்காக, ஓங்கோல், கிர், சாஹிவால், தார் பார்க்கர், சிவப்பு சிந்தியா போன்ற உயர் ரக பசுக்களை தானமாக அளிக்கலாம். பசுக்களை தானமாக அளிப்பவர்களுக்கும், மற்ற ஆர்ஜித் சேவைகளுக்கு வழங்கப்படும், சிறப்பு மரியாதை அளிக்கப்படும். புதிய அறக்கட்டளை குறித்த பிரசாரம் செய்யப்படும். பக்தர்கள் வழங்கும் பசுக்களின் பராமரிப்பு குறித்த விவரம் ஓராண்டு வரை அவர்களுக்கு தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.