அதிகாலையில் எழுவோமே! அதிகாலையில் எழுவது மிக நல்ல பழக்கம். ரமலான் நோன்பு வைக்கும் காலம் அதிகாலை வேளையாக இருப்பதால், இதற்காக விரைவில் எழுகிறோம். இந்தப் பழக்கம் எப்போதுமே தொடர வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தன்னிடம் கூறிய விஷயங்களை சொல்கிறார்கள்.. கேளுங்கள். ""எவன் என்னிடம் ஒரு ஜாண் நெருங்கி வருகின்றானோ, அவனிடம் நான் ஒரு முழம் நெருங்கி வருகின்றேன். என்னிடம் ஒரு முழம் நெருங்கி வருபவனை நான் இரண்டு முழம் நெருங்குகின்றேன். எவன் என்னிடம் நடந்து வருகின்றானோ அவனை நோக்கி நான் ஓடி வருகின்றேன். என்னை அழைப்பவர் எவரேனுமுண்டா? அவருக்கு நான் பதில் கூறுகின்றேன். என்னிடம் கேட்பவர் எவரேனுமுண்டா? அவருக்கு நான் வாரி வழங்குகின்றேன். என்னிடம் மன்னிப்பு வேண்டுபவர் எவரேனுமுண்டா? அவரை நான் மன்னிக்கின்றேன். இவ்வாறு கூறும் அல்லாஹ்விடம், எதையேனும் கேட்க விரும்புபவர்கள் அதிகாலைப் பொழுதில் கேட்க வேண்டும். ஏனெனில், இரவுக்காலத்தை மூன்றாகப் பிரித்து, அதில் இரண்டு பங்கு கழிந்த பின், மூன்றாம் பங்கு துவங்கியவுடன் அல்லாஹ், முதல் வானத்தின் மீது இறங்கி வந்து, தன் அடியார்களை அழைத்துச் செல்கிறான். இதன் மூலம் அதிகாலையில் விழிப்பதையும், தொழுவதையும் இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது. நாமும் தினமும் அதிகாலையே எழுவோமா!
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.25