விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இன்று முதல் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் துவங்குவதால், தேரோடும் வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தின்போது, திருத்தேரில் சுவாமி, நான்கு வீதிகளிலும் வீதியுலா வந்து அருள்பாலிப்பது வழக்கம். இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில் தேரோடும் வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இந்நிலையில், ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் இன்று 31ம் தேதி முதல் துவங்கி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. ஆனால், இதுவரை சன்னதி வீதி, தென்கோட்டை வீதி பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இந்த வீதிகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமம் அடைவர். எனவே, விருத்தகிரீஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.