புதுக்கோட்டை: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழா முன்னிட்டுஇன்று(31ம் தேதி) தேர்திருவிழா கோலாகலத்துடன் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்று அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடப்பது வழக்கம்.இந்தாண்டு திருவிழா கடந்த 23ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. விழாவின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தேர்திருவிழா துவங்குகிறது. இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகின்ற தேர்திருவிழாவில் வீரமாகாளியம்மன் சர்வ அலங்காரத்துடன் திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். ஆடித்திருவிழாவை நிறைவு நிகழ்ச்சியாக 9ம் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. தேர் திருவிழாவை முன்னிட்டு அறந்தாங்கி டவுன் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகரின் பல பகுதிகளில் தற்காலிக சின்டேக்ஸ் டேங்குள் வைத்து பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.