பதிவு செய்த நாள்
05
ஆக
2013
10:08
தமிழகத்தில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 36,451 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் விவரங்கள் குறித்த அறிவிப்பையும், கோவில் சிறப்பு, அமைந்துள்ள இடத்தையும் குறிப்பிட்டு, அறிவிப்புப் பலகைகள் வைக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. கோவில் அமைந்துள்ள இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டருக்குள், விளக்கப் பலகைகள் வைக்க வேண்டும் என்பதும் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும், விளக்கப் பலகை வைக்கும் பணி நடக்கிறது. இதுகுறித்து, அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவில்களைப் பற்றிய விவரங்களை, அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த மக்களும் அறிந்து கொள்ள, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கோவில் விவரங்கள் அனைத்தும், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி, முடியும் தறுவாயில் உள்ளது. சுற்றுலா வருவோர், கோவில்களைத் தெரிந்து கொள்ள ஏதுவாக, அறிவிப்புப் பலகை வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.