பதிவு செய்த நாள்
23
செப்
2013
11:09
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமை விழா துவங்கியது. இவ்விழா தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு, அக்., 19ம் தேதி வரை நடைபெறும். அதிகாலை 3.00 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சவ மூர்த்தியான அரங்கநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோவிலில் உள்பிரகாரம் வலம் வந்து, கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதல் அதிகளவில் இருந்ததால், நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். அக்., 4ம் தேதி மாஹாளய அமாவாசை விழா, 5ல் நவராத்திரி உற்சவ துவக்க விழாவும் நடக்கிறது. 12ம் தேதி நான்காம் சனிக்கிழமை விழாவும், 13ல் சரஸ்வதி பூஜை, 14ல் விஜயதசமி, குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, நவராத்திரி உற்சவம் விழா நடைபெற உள்ளது.