பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில், நவராத்திரி விழாவில், அம்மன், பாணாசுரனை வதம் செய்தார். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில், அக்., 5 ல், துவங்கிய இவ்விழாவின், பத்தாம் நாளான நேற்று, பரிவேட்டை நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 10.30 க்கு, அலங்கார மண்டபத்தில், வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, அருள் பாலித்தல் நடந்தது. தொடர்ந்து அம்மன், பரிவேட்டைக்காக கோயிலை வலம் வந்து, ஊர்வலமாக புறப்பட்டார். அப்போது, போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து யானைகள், குதிரைகள் அணிவகுக்க, மேளதாளத்துடன், ஆடிப்பாடியபடி, ஏராளமான பக்தர்கள் அணிவகுத்தனர். ஊர்வலம், கன்னியாகுமரி மெயின்ரோடு வழியாக மாலை 5 மணியளவில் மகாதானபுரம் மண்டபத்தை அடைந்தது. அங்கு நடந்த, பாணாசுரன் எனும் அரக்கனை, அம்மன் வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சியை, திரண்டிருந்த பக்தர்கள் தரிசித்தனர். பின்னர், பரிவேட்டை பவனி பஞ்சலிங்கபுரம், விவேகானந்தபுரம் வழியாக, கோயிலை வந்தடைந்ததும், தேவிக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடந்தது. தொடர்ந்து கிழக்குவாசல் வழியாக, நள்ளிரவு 12 மணியளவில், அம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தார்.