பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
தஞ்சாவூர்: கண்மாய் கரையில் கண்டுபிடிக்கப்பட்ட சிலை தொடர்பாக, ஆய்வாளர்கள் இடையே எழுந்த சர்ச்சைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதுகை மாவட்டம், கவிநாடு கண்மாயில், 3.5 அடி உயரம், 3 அடி அகலம் உள்ள சிலை ஒன்று, சமீபத்தில் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது, புத்தர் சிலையா, சமணர் சிலையா என, ஆய்வாளர்கள் இடையே சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், அது, சமண தீர்த்தங்கரர் சிலை என, ஆய்வு முடிவில், தஞ்சை வரலாற்று ஆய்வாளர் ஜம்புலிங்கம் உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆய்வாளர், ஜம்புலிங்கம் கூறியதாவது: சிலையின் அமைப்பை ஆய்வு செய்த போது, தியான கோலத்தில் சிலை அமைப்பு உள்ளது. பொதுவாக, புத்தர் சிலைகளில் சுருள் முடியை காண முடியும். புத்தர் சிலையின் தலையில் காணப்படும் தீச்சுடர் வடிவிலான முடி, கவிநாடு கண்மாயில் கண்டெடுத்த சிலையில் காணப்படவில்லை; தீச்சுடர் செதுக்கப்பட்டதற்கான அடையாளமும் சிலையில் இல்லை. பெரும்பாலான புத்தர் சிலைகளில், நெற்றியில், திலகக்குறி இருக்கும்; கையில், தர்ம சக்கரக் குறி இருக்கும். இந்த, இரண்டுமே கண்டெடுத்த சிலையில் இல்லை. சிலையில், மேலாடை இருப்பது தெரியவில்லை. சிலையின் பின்புறத்தை பார்க்கும் போது, ஆடையில்லாமல் இருப்பது உறுதியாகிறது.
தீத்தங்கரர் சிலை: மேலாடை இல்லாததால், இது புத்தர் சிலை அல்ல; சமண தீர்த்தங்கரர் சிலை என, உறுதியாக கூற முடியும். புதுகை மாவட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில், சமண தீர்த்தங்கரர் சிலைகளே கிடைத்துள்ளன. "சோழநாட்டில் பவுத்தம் எனும் தலைப்பில், 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறேன். இதில், சோழநாட்டில், 60க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், புதுக்கோட்டையில் மிகக்குறைந்த அளவே புத்தர் சிலைகளை காண முடிந்தது. ஆலங்குடிப்பட்டி, செட்டிப்பட்டி, வெள்ளனூர் ஆகிய இடங்களில், புத்தர் சிலை இருப்பதாக, வரலாற்றறிஞர், மயிலை சீனி வேங்கடசாமி, "பவுத்தமும், தமிழும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆலங்குடிப்பட்டி அருகே, சமணர் சிலையை மட்டுமே, காண முடிந்தது. செட்டிப்பட்டியிலும், வெள்ளனூரிலும், எந்த சிலைகளும் காணப்படவில்லை. இந்த சிலைகள் கூட, சமணர் சிலைகளாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை ஒரு மிகச்சிறந்த சமண மையமாக இருந்ததை, உறுதி செய்யும் சான்றாக, கவிநாடு கண்மாயில், சமணர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.