பதிவு செய்த நாள்
09
நவ
2013
11:11
தூத்துக்குடி: அநீதியை அழித்து நீதியை நிலை நாட்டும் விதமாக சூரனை வதம் செய்யும் "சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, திருச்செந்தூரில் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள், பரவசத்துடன் தரிசனம் செய்தனர். திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா, நவ.,3 ல், யாகசாலை பூஜையுடன் துவங்கியது. பக்தர்கள், பச்சை ஆடை அணிந்து விரதம் துவக்கினர். முருகன் தினமும், யாக சாலையில் எழுந்தருளினார். உச்சி காலத்தில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.
சூரசம்ஹாரம்: சஷ்டி விழாவின் நிறைவாக, "சூரசம்ஹார நிகழ்ச்சிகள், நேற்று காலை 7 மணிக்கு, யாகசாலை பூஜையுடன் துவங்கின. யாகசாலை மண்டபத்தில், ஜெயந்திநாதர் எழுந்தருளினார்; தீபாரதனை நடந்தது. உச்சிகால பூஜைக்குப் பின், சண்முக விலாச மண்டபத்தில், ஜெயந்திநாதர் எழுந்தருளினார். சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின், திருவாவடுதுறை கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை 4.35 மணிக்கு, சூரசம்ஹாரத்திற்காக கடற்கரையில், ஜெயந்திநாதர் எழுந்தருளினார். முதலில், கஜமுகத்துடன் சூரபத்மன் தோன்றினான். அவன், ஆணவத்துடன் தலையை ஆட்டியபடி, ஜெயந்திநாதரை சுற்றி வந்தவுடன், மாலை 5.21 மணிக்கு, வதம் செய்து தலையை கொய்தார். மீண்டும், சிங்கமுகத்துடன் வந்த சூரனை, மாலை 5.41 மணிக்கு, ஜெயந்திநாதர் வதம் செய்தார். பின், சூரபத்மன் நேரிடையாக தோன்றினான். அவனை, மாலை 6 மணிக்கு, வதம் செய்தார். பின், சேவலாகவும், மாமரமாகவும் தோன்றிய சூரனை அழித்து, தனது வாகனங்களான சேவலாகவும், மயிலாகவும் ஏற்றுக்கொண்டார். கடற்கரையில், இந்நிகழ்ச்சியை காண்ட பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, "கந்தவேல் முருகனுக்கு அரோகரா கோஷங்களுடன் பரவசம் அடைந்தனர். கடல் அலைகளை மிஞ்சும் விதமாக, கடற்கரை முழுதும் பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ஜெயந்திநாதர், சந்தோஷ மண்டபத்தில், வள்ளி தெய்வானையுடன் அருள்பாலித்தார். பின், பூஞ்சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதருக்கு, 108 மகா சக்தி மண்டபத்தில், சாய அபிஷேக ஆராதனை நடந்தது. சூரசம்ஹாரத்திற்கு பின், பக்தர்கள் விரதம் முடித்து, வெள்ளித் தகடுகளை உடலில் கட்டிக் கொண்டனர்.
பாதுகாப்பு: ஐ.ஜி., அபய்குமார் சிங், டி.ஐ.ஜி., சுமித்சரண் தலைமையில் துரை எஸ்.பி., பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். கூடுதல் எஸ்.பி.,- 2 பேர், டி.எஸ்.பி.,- 6 பேர், 25 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 25 இடங்களில் "சிசி டிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு: அனைத்து வாகனங்களும், திருச்செந்தூருக்கு வெளியில் நிறுத்தப்பட்டன. சிறப்பு அனுமதி (பாஸ்) பெற்றவர்கள் மட்டும் நாழிக் கிணறு, தாலுகா அலுவலகம் வரை அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு அனுமதி அதிகளவில் வழங்கப்பட்டதால், கோயில் பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
பக்தர்கள் தவிப்பு: கோயில் நிர்வாகம், முறையான ஏற்பாடுகளை செய்யாததால், பக்தர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். கோயிலில் விரதமிருந்த பக்தர்கள், குளிப்பதற்கு வசதியின்றி லாட்ஜ்களை தேடி அலைபாய்ந்தனர்.
பஸ்களுக்கு அனுமதி மறுப்பு: மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை பகுதியில் இருந்து வந்த சிறப்பு பஸ்களை, பஸ் ஸ்டாண்டில் அனுமதிக்க, போக்குவரத்து அதிகாரிகள் மறத்து விட்டனர். இதனால் டிரைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒத்துழைப்பு இல்லை: கோயில் நிர்வாகம், பேரூராட்சி இடையே ஏற்பட்ட முரண்பாடுகளால், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதில் குழப்பம் ஏற்பட்டது.
சுகாதாரக்கேடு: கன மழையால், நகர் பகுதி ரோடுகளில் சேறும், சகதியுமாக இருந்தது; பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர். தெருக்களில் குப்பை அகற்றப்படாமல் குவிந்து கிடந்தது.
வாகன "பாஸ் ரூ.1000: * கோயில் சார்பில், கார்களுக்கு "பாஸ் வழங்கப்படும். ஆனால், விழா முதல் நாள் வரை, யாருக்கும் வழங்கப்படவில்லை. ரூ.500, 1000 என, "பாஸ் மொத்தமாக விற்கப்பட்டதாக, பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
* பிரேசில், சிங்கப்பூர், இலங்கை, மலேசியாவில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.
* சூரசம்ஹார நிகழ்ச்சிகளை, வழக்கமாக, வர்ணனையாளர்கள் மூலம் பக்தர்களுக்கு ஒலிபரப்பு செய்வர். இந்த ஆண்டு, அதற்கான ஏற்பாடு செய்யப்படவில்லை.
* கோயில் விடுதியில், 350 அறைகள் உள்ளன. இவை உபயதாரர், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கு மட்டும், 35 அறைகள் ஒதுக்கப்பட்டதாக, அதிருப்தி ஏற்பட்டது.
* சூரனை வதம் செய்த போது, பக்தர்கள் கூட்டம் முண்டியடித்தது. தடுப்புக்காக கட்டப்பட்ட சவுக்கு கட்டைகளை உடைத்து கொண்டு, பக்தர்கள் கீழே விழுந்தனர்.
* வேலவன் விடுதி, நாழிக்கிணறு அருகில் "டிஜிட்டல் திரைகளில், சூரசம்ஹார நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.