வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று மாலை லட்ச தீப விழா நடந்தது.வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் லட்ச தீப விழா நடத்தப்படுகிறது. எட்டாம் ஆண்டாக நேற்றைய லட்ச தீப விழாவிற்காக சவுந்தரராஜா பெருமாள் ஆன்மிக அறக்கட்டளை நிர்வாகிகளும், பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் அகல்விளக்குகளை, கோயில் வளாகம், சன்னதி வீதியில் சக்கரம், சங்கு, நாமம் உள்ளிட்ட பல்வேறு அழகிய வடிவங்களில் அடுக்கி வைத்தனர். மாலை 6 மணிக்கு அர்ச்சகர் அழைப்பை தொடர்ந்து மூல ஸ்தானத்தில் இருந்து பெருமாள் சுவாமியுடன் திருக்கோடி தீபம் புறப்பாடு நடந்தது. பின்னர், தீப கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டதும், கோயில் மணி தொடர்ந்து ஒலிக்க பக்தர்கள் தீபங்களை ஏற்றினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.