பகவான் ஐயப்பனை எடுத்தது, வளர்த்தது, கோயில் கட்டியது என எல்லாவற்றையும் பந்தளம் மன்னர் செய்தாலும், இன்று சபரிமலையில் திருவிதாங்கூர் அரண்மனைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறும் மகர சங்கரம வேளையில் பகவானுக்கு அபிஷேகம் செய்யப்படும் நெய் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் ராஜ்யத்தின் கவடியார் அரண்மனையில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் சபரிமலையில் நிறைபுத்தரி என்னும் நிகழ்ச்சி நடக்கிறது. வயலில் விளைந்த நெற்கதிர்களை கோயிலில் நிறைப்பது நிறைபுத்தரி ஆகும். இதற்கான தேதியை இன்றும் திருவிதாங்கூர் அரண்மனைதான் நிச்சயம் செய்கிறது. ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மன்னரின் பிறந்தநாளை யொட்டி சபரிமலை நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மன்னர் சித்திரை திருநாள்தான் கேரளாவில் கோயில் பிரவேச பிரகடனத்தை அமல் செய்தவர். இத்திருநாளை சித்திரை ஆட்டத்திருநாள் என்பர்.
கார்த்திகை, மார்கழி மாதத்தில் நடக்கும் மண்டல, மகர விளக்கு காலத்தில் நிறைவாக நடக்கும் மண்டல பூஜை தினத்தில் பகவானுக்கு அணிவிக்கப்படும் தங்கஅங்கி சித்திரை திருநாள் மகாராஜா பகவான் ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கியதாகும். இது 420 பவுன் எடை கொண்டது. இன்றைய மார்க்கெட்படி சுமார் 20 லட்சம் மதிப்புடையது இது. இப்படி சபரிமலை வரலாற்றில், திருவிதாங்கூர் அரண்மனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே நேரம், பந்தளம் மன்னர் குடும்பத்துக்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் கொண்டு வருவதுடன், ஒவ்வொரு ஆண்டும் நடை திறந்து பூஜிக்க மன்னரின் அனுமதி கோரப்படுகிறது.