பதிவு செய்த நாள்
06
டிச
2013
11:12
பழநி: பழநிகோயில் கிரிவீதியில், வாகனங்களை நிறுத்த தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுவழி மூலம், கோயில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்த, இன்று சோதனை வெள்ளோட்டம் நடக்கிறது. பழநிகோயிலுக்கு ஐயப்பன் சீசன் எதிரொலியாக, ஏராளமான வாகனங்கள் வருகிறது. இவைகள், கிரிவீதியை ஆக்கிரமித்து நிறுத்துவதால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக, முதற்கட்டமாக உடுமலை, பொள்ளாச்சியிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள், குளத்துரோடு, அருள்ஜோதி வீதி வழியாக சென்று வின்ச் ஸ்டேஷன் எதிரேயுள்ள, கோயில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்படுகிறது. திண்டுக்கல், கொடைக்கானல் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், இடும்பன்மலை அருகேயுள்ள சுற்றுலா பேருந்து நிலையத்தில் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கிரிவீதிக்குள் நான்குசக்கர வாகனங்கள் வருவது முற்றிலும் தடை செய்யப்படவுள்ளது. நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் கூறுகையில்,""கிரிவீதிவரை கார், வேன்களை அனுமதிப்பதால், அவர்கள் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல், கிரிவீதியை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதனால், தற்போது மாற்றுவழியில் வர ஏற்பாடு செய்துள்ளோம். இன்று சோதனை வெள்ளோட்டம் நடக்கிறது. கிரிவீதியில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படும், என்றார்.