பதிவு செய்த நாள்
09
டிச
2013
10:12
அனைத்து நடராஜர் கோயில்களில் மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று(டிச.9ல்) துவங்குகிறது. இந்நாட்களில் நடராஜருக்கு களி நைவேத்யம் செய்வது முக்கியம். ஏன் அவருக்கு களி படைக்கப்படுகிறது தெரியுமா! சேந்தனார் என்பவர் பெரும் சிவபக்தர். தில்லையம்பதியான சிதம்பரத்தில் தன் மனைவி யுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்கள் வந்தால் அவர்கள் மனம் கோணாமல் உபசரிப்பார். ஒருமுறை அவ்வூரில் பலத்த மழை பெய்து விறகெல்லாம் நனைந்து விட்டது. அங்கு வரும் அடியவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. சேந்தனாரும் அவரது மனைவியும் கவலை கொண்டனர். இந்த நேரத்தில் யாராவது வந்து விட்டால் அவர்களுக்கு அமுது படைப்பது எப்படி என்ற கவலையில் இருந்தபோது, அவர்கள் எதிர்பார்த்தபடியே ஒரு சிவனடியார் வந்து சேர்ந்தார். இவ்வளவுநாளும் வந்தவர்களைவிட, இவர் தேஜசாக,ஜடாமுடி தரித்து காணப்பட்டார். தம்பதிகளுக்கு கை,கால் உதறியது. அரிசி சாதம் செய்வது இந்த ஈர விறகால் ஆகாது எனக்கருதிய சேந்தனாரின் மனைவி, அரிசி, உளுந்துமாவுடன், வெல்லமும், நெய்யும் கலந்து ஈர விறகை ஒருவாறாக பற்றவைத்து ஊதி, குறைந்த அளவு தீயிலேயே களி தயாரித்து விட்டார். அதை சிவனடியாருக்கு படைத்தார். அன்றைய தினம் பவுர்ணமி நாள். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நேரம். வந்தவர் அதைச் சாப்பிட்டு விட்டு, இத்தனை சுவையான இனிய உணவை தன் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை எனப் புகழ்ந்தார். ""தினமும் தயிர்ச்சாதமும், புளியோதரையும், சர்க்கரை பொங்கலும் சாப்பிட்டு பழகிப் போன எனக்கு, தாங்கள் அளித்த இந்த இனிய களி மிகப் பிரமாதமாக இருந்தது, என பாராட்டினார். ஒரு எளிய உணவை தேனினும் இனிமையானது என பாராட்டியதால், மனம் மகிழ்ந்தனர் தம்பதியர். மறுநாள் காலையில் அவர்கள் தில்லையம்பலம் நடராஜரை தரிசிக்க சென்றனர். நடையெல்லாம் தாங்கள் தயாரித்த களி கொட்டிக் கிடந்தது. நடராஜப் பெருமானின் வாயில் களி சிறிதளவு ஒட்டியிருந்தது. தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியது நடராஜப் பெருமான் என்பதை உணர்ந்த தம்பதியர் உடல் புல்லரிக்க, அவரது பாதத்தில் வீழ்ந்தனர். அன்றுமுதல் நடராஜப் பெருமானுக்கு திருவாதிரை திருவிழா சமயத்தில், களி படைக்கும் பழக்கம் உருவாயிற்று.