தாரமங்கலம்: கைலாசநாதர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் ஊடல் தீர்த்த படல புராண நிகழ்வு விழா நேற்று நடைபெற்றது. கைலாசநாதர் கோயிலில் ஆரூத்ரா தரிசன விழா புதன்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நடராஜருக்கும்,சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு,சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. சிவபெருமானிடம் பார்வதி கோபம் கொண்டு கோபுர வாயிலைத் தாண்டி வரக்கூடாது என்று சொன்ன புராண நிகழ்வை நினைவுகூறும் வகையில், சிவசக்தியிடையே சுந்தரமூர்த்தி நாயனார் ஊடல் தீர்த்த படல நிகழ்ச்சி நடைபெற்றது. சிவபெருமான் மூன்று முறை கோபுரக் கதவுகளைத் தட்டியப் பிறகு, கதவுகள் திறக்கப்பட்டன. ஊடல் தீர்ந்தவுடன் சிவசக்தி சமேதராய் காட்சியளித்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.