ராமனுடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது ராமாயணம். ஆனால், ராமாயணத்திற்கு வால்மீகி இட்ட பெயர் என்ன தெரியுமா? சீதையின் கதை என்பது தான். க்ருத்ஸ்நம் ஸீதாயாஸ் சரிதம் மஹத் என்று ராமாயணத்தை தொடங்குகிறார். இதன் பொருள், உயர்ந்த சீதாதேவியின் வரலாற்றை சொல்கிறேன் என்பதாகும். லவன், குசனை சீடர்களாக ஏற்ற வால்மீகி, ராமாயணத்தை எடுத்துச் சொல்லும் போதும், மகிமை மிக்க சீதையின் சரிதம் என்று குறிப்பிடுகிறார். வைணவம் ராமாயணத்தை, சிறை இருந்தவள் ஏற்றம் என்றே குறிப்பிடுவர். விவேகானந்தர், இந்திய மாதர்களின் லட்சியப் பெண் சீதை. அவளைப் போல ஒரு சிறந்த பெண்மணி பிறந்ததும் இல்லை. இனி பிறக்கப் போவதும் இல்லை, என்று புகழ்கிறார்.