பதிவு செய்த நாள்
09
ஏப்
2014
02:04
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில், பங்குனி உத்திர திருவிழா, ஏப்ரல், 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 13ம் தேதி காலை, தேரோட்டம் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய தலங்களில், சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவில் ஒன்று. இம்மலை கோவிலில் தான், பால தேவராய சுவாமிகள் அருளிய, கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அருணகிரி நாதரும், திருப்புகழில், சென்னிமலை முருகப்பெருமானை துதித்து, ஐந்து பாடல்கள் பாடி உள்ளார். வேறு எந்த முருகன் கோவிலிலும் இல்லாத சிறப்பாக, இங்கு தினமும் முருகப்பெருமானுக்கு, எருதுகள் மூலம், 1,320 படி வழியாக, திருமஞ்சனம் கொண்டு செல்வது போன்ற, அநேக அதிசயங்கள் கண்டது இச்சென்னிமலை. இங்கு முருகனுக்கு, தைப்பூசதேர், பங்குனி உத்திர தேர் என, இரண்டு திருத்தேர் உள்ளது. ஆண்டு தோறும் தைப்பூச தேரோட்டமும், பங்குனி தேரோட்டமும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்தாண்டு பங்குனி உத்திர தேரோட்டம், ஏப்ரல், பத்தாம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 11ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 12ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. வரும், 13ம் தேதி காலை, ஐந்து மணிக்கு மேல் ரதாரோகண காட்சியும், தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று காலை, ஏழு முதல் தேவஸ்தான மண்டபத்தில், அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பில் அன்னதானம் நடக்கிறது. அன்று மாலை, ஐந்து மணிக்கு தேர் நிலை சேரும். 14ம் தேதி காலை, பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. 15ம் தேதி காலை, எட்டு மணிக்கு மகாதரிசனம் நிகழ்ச்சியும், இரவு, எட்டு மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, உதவி ஆணையாளரும் தக்காரும்மான சபர்மதி, கோவில் செயல் அலுவலர் பசவராஜன், தலைமையில், தலைமை எழுத்தர் ராஜி, கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், மற்றும் ஸ்ரீபூசாரி வேளாளத்தம்பிரான் கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.