பதிவு செய்த நாள்
17
ஏப்
2014
11:04
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் இன்று, மாலை நடக்கிறது. இதையடுத்து நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 1ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. 8 ம்தேதி திருவிழா கம்பம் போடப்பட்டது. 11ம் தேதி கொடியேற்றம் நடந்தது.நோன்பு சாட்டுதலையடுத்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கின்றன. கம்பம் போடப்பட்டபின், பக்தர்கள் கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். கொடியேற்றத்தை தொடர்ந்து, தினமும் பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை, பக்தர்கள் பூவோடு எடுத்து நேர்த்திக் கடன் செய்தனர். காலை, மாலை இருவேளையும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், ஒவ்வொரு நாளும் இரவு 7.00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஒவ்வொரு வாகனத்திலும் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு 10.00 மணிக்கு நிறைவடைந்தது. நேற்று அதிகாலை 4.00 மணிக்கு, அபிேஷகம், ஆராதனைகள் மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று மாலை அம்மன், சூலத்தேவருக்கு மகா அபிேஷகம் நடந்தது.
சிறப்பு அலங்காரம், தீபாராதனை, யாக பூஜைகள் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நேற்று மாலை 4.00 மணிக்கு, சூலத்தேவருக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை 4.15 மணிக்கு நடக்கிறது. தேர் கோவில் வளாகத்தில் துவங்கி, தளி ரோடு, குட்டைத்திடல், தங்கம்மாள் ஓடை தல கொண்டம்மன் கோவில் வழியாக, பொள்ளாச்சி ரோட்டை அடைந்து, மீண்டும் கோவிலை வந்தடைகிறது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்று தேரை வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர்.
பலத்த பாதுகாப்பு : பிரசித்தி பெற்ற உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை காண, உடுமலை நகர் மட்டுமின்றி, சுற்றுப்பகுதி கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் வருகை தருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்: மாரியம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று மதியம் 2.00 மணி முதல் முக்கிய ரோடுகளில் போக்குவரத்து மாற்றி விடப்படும் என, போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது. தேர் பொள்ளாச்சி ரோட்டிலுள்ள கோவிலில் இருந்து துவங்கி தளி ரோடு, குட்டைத் திடல், தங்கம்மாள் ஓடை வழியாக மீண்டும் கோவில் வளாகத்துக்கு வருகிறது. இதையொட்டி, நகரில் முக்கிய ரோடுகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 2.00 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை, பழநி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், புதிய பஸ் ஸ்டாண்ட் சிக்னலில் இருந்து பிரிந்து ராஜேந்திரா ரோடு வழியாக சென்று ராமசாமி நகர், அரசு கலைக் கல்லூரி, எலையமுத்தூர் பிரிவு, போடிபட்டி, வாளவாடி வழியாக பொள்ளாச்சி ரோட்டை அடைய வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து உடுமலை நோக்கி வரும் வாகனங்கள், முக்கோணத்தில் இருந்து பிரிந்து, வாளவாடி வழியாக, திருமூர்த்திமலை ரோட்டை அடைந்து அங்கிருந்து உடுமலை நகருக்குள்ள வரவேண்டும். போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்தும் வகையில் நகர் எல்லைகளில் போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்படுவர்.
வாணவேடிக்கை நிகழ்ச்சி: தேரோட்டத்தை தொடர்ந்து, குட்டைத்திடலில், நாளை (18ம் தேதி) இரவு 8.00 மணிக்கு பரிவேட்டையும், இரவு 10.00 மணிக்கு வாணவேடிக்கையும் நடக்கிறது.