பதிவு செய்த நாள்
18
ஏப்
2014
11:04
கம்பம் : பகவானுக்கு எத்தனை குணங்கள் உண்டு, என்று கம்பத்தில் நடைபெற்று வரும் தொடர் ஆன்மிக சொற்பொழிவில் சுவாமி ஓங்காரநந்தர் விளக்கமளித்தார். அவருடைய அருளுரை: மனதிற்கு அமைதி தரும் அருள் நூல் கீதை. மனம் போன போக்கில் பலர் வாழ்ந்து, அவர்களும் துன்பமடைந்து,மற்றவர்களையும் துன்பமடைய வைக்கின்றனர். மகான்களின் அறிவுரையை கேட்கவேண்டும். கல்வி கற்க வேண்டும். திருக்குறளை தினமும் படிக்க வேண்டும். நல்ல புத்தகங்களை படித்தால் அறியாமை அகலும். இந்த உடம்பு நன்றாக இருக்கும் போதே, உயிருக்கு உறுதியை தேடிக் கொள்ள வேண்டும். துன்பப்படும் போது மட்டும் இறைவனை நினைக்க கூடாது. பெற்றோர்களை பாதுகாக்க வேண்டும். ஒழுக்கத்தை கடைப்பிடிக்க குடும்பம் தேவை. ஏழைகளை பாதுகாக்க வேண்டும். ஒழுக்கம் இல்லாதவனிடம், பணம் இருந்தாலும் பயன் இல்லை. அறிவில்லாதவர்களிடம் எல்லாம் இருந்தும் பயன் இல்லை. அறிவுடையவர்களிடம் எல்லாம் இருக்கும். அறிவை ஆசை மூடி இருக்கிறது.உடம்பிற்கு, பிறப்பு இறப்பு இருக்கு. உயிர், மனதுக்கு பிறப்பு இறப்பு இல்லை. மனித உடல் கிடைப்பது அரிது. ஆனால், நீண்ட நாளைக்கு இருக்க முடியாது. உயிர் உடம்பிற்குள் இருக்கும் போதே, எதற்காக படைக்கப்பட்டமோ, அதை நிறைவேற்ற வேண்டும். மனநிறைவுடன் உடம்பில் இருந்து <உயிர் பிரியவேண்டும். இந்த உடம்பில் இருந்து உயிர் பிரியும் போது, யாருக்கும் தெரியாது. எனவே "எப்போதும் என்னை தியானம் பண்ணிக் கொண்டிரு என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். "நிலையற்ற உடம்பை பெற்றுள்ள நீ, நிலையான இன்பம் பெற என்னை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று மேலும் கூறுகிறார். மகாபாரதத்தில் ஒரு லட்சம் சுலோகங்கள் உள்ளன. ராமாயணமும், மகாபாரதமும் இதிகாசங்கள். கட்டுக்கதைகள் அல்ல. இதிகாசங்கள் வேறு. புராணங்கள் வேறு. இதிகாசங்களில் உண்மை அதிகம்.கற்பனை குறைவு. புராணங்களில் உண்மை குறைவு. கற்பனை அதிகம். மகாபாரதத்தை, வேதவியாசர் தாமரை மலருடன் ஒப்பிடுகிறார். மகாபாரதம் சொல் குற்றம், பொருள் குற்றம் இல்லாதது. அழுக்கு இல்லாதது. மென்மையான ஸ்பரிச உணர்வு ஏற்படும். மகாபாரதத்தில் பகவத் கீதை உயர்ந்தது. மண் ஆசை, பெண் ஆசையால் தோன்றியது தான் மகாபாரதம் மற்றும் ராமாயணம். இறைவனால் பாடப்பட்ட பாட்டு பகவத் கீதை. பகவத் கீதைக்கு "மெய் இயல் என்று அர்த்தம். ஆறு குணங்களை உடையவன் பகவான், அவனே நிறைவானவன். இவ்வாறு பேசினார்.