பதிவு செய்த நாள்
29
மே
2014
11:05
திருப்போரூர் : திருப்போரூரில் கிருத்திகை விழா பக்தர்கள் குவிந்தனர். திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில் நேற்று கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவிகள் தேர்ச்சி மற்றும் கோடைகால விடுமுறை என்பதால், கந்தனை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து கந்தனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். முடி காணிக்கை செலுத்தவும், அதிகளவில் கூட்டம் அலைமோதியது. திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று வைகாசி மாத கிருத்திகை விழா நடந்தது. இதையொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு, மூலவருக்கு விபூதி, பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் அபிஷேக பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளித் தேரில் எழுந்தருளி, மலைக்கோவிலில் ஒருமுறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருத்திகை விழாவை முன்னிட்டு, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர்.