அன்னை அஞ்சனாதேவி, திருப்பதியில் தவம் செய்து பெற்ற பிள்ளையே ஆஞ்சநேயர். அதற்கு நன்றிக்கடனாகத் தன் பிள்ளையிடம், வெங்கடாஜலபதி சந்நிதி முன் எப்போதும் வணங்கிய கோலத்தில் நிற்கும்படி உத்தரவிட்டாள். குழந்தையான ஆஞ்சநேயர், அம்மாவுக்கு தெரியாமல் குறும்புத்தனம் செய்து வானமண்டலத்தில் பறக்கத் தொடங்கினார். கோபம் கொண்ட தாய், ஆஞ்சநேயரை மீண்டும் திருமலைக்கு இழுத்து வந்தாள். மற்ற வானரங்களின் உதவியோடு, விண்வெளியை மாயக்கயிறாக மாற்றி பிள்ளையைக் கட்டி வைத்தாள். கைகளில் விலங்கிட்ட நிலையிலுள்ள அந்த ஆஞ்சநேயரே திருமலையில் வெங்கடேசப்பெருமாள் முன்னிலையில் இன்றும் பேடி ஆஞ்சநேயர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்த பின்னரே, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற நியதி இங்கு பின்பற்றப்படுகிறது.