பதிவு செய்த நாள்
25
ஜூலை
2014
12:07
திருப்பூர்: மனிதர்கள், தெய்வீகமாக வாழ வழிகாட்டியவர்கள் ரிஷிகள், என, பெங்களூரு யோகா பல்கலை துணைவேந்தர் சுப்ரமணியம் பேசினார். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.,) சார்பில், திருப்பூரில் உள்ள ஆயிரவைசிய திருமண மண்டபத்தில், ஸ்ரீகுருபூஜை விழா நேற்று நடந்தது. பெங்களூரு சுவாமி விவேகானந்தா யோகா பல்கலை துணைவேந்தர் சுப்ரமணியம் பேசியதாவது: நமது பாரதத்தில் ஏராளமான ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் வாழ்ந்திருக்கின்றனர். சமஸ்கிருதத்தில், அவர்கள் "ரிஷி எனப்படுவர். ரிஷிகளின் பரம்பரை தேசம் இந்தியா. ஆன்மிக துறையில், தத்துவங்களில் அவர்கள் கண்டறிந்த ஆராய்ச்சி ஏராளமானவை. மனிதர்கள், அன்பாக, தெய்வீகமாக உயர்ந்து வாழ ரிஷிகள் வழிகாட்டியுள்ளனர். நாரத மகரிஷி, விஸ்வாமித்ர மகரிஷி, தன்வந்திரி மகரிஷி, கவுடில்ய மகிரிஷி, பரத மகிரிஷி, வாத்சாயன மகரிஷிகள் வாழ்க்கையில் அனைத்தையும் ஆராய்ச்சி செய்து தந்திருக்கின்றனர். பக்தி சூத்திரங்கள், ஆன்மிக தத்துவங்கள், மருத்துவம், பணம் சம்பாதித்தல், வணிக சூத்திரம், இசை நடனம், தம்பதி சுகம் என 108 ரிஷிகள், ஒவ்வொரு துறையிலும் மிக சிறந்த ஆராய்ச்சிகளை நமக்கு தந்து, ஆசிரியர்களாக விளங்கியுள்ளனர்; இந்தியா ஆசிரியர்களின் நாடாக இருக்கிறது.
புரிந்துகொள்ளும் சக்தியுள்ள மக்கள், புரிந்துகொள்ள முடியாத மக்கள் என இரண்டு தரப்பினருக்கும் மதம் கற்று தரப்பட்டிருக்கிறது; அதை ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக ரிஷிகள் சொல்லித் தந்திருக்கின்றனர். சிறந்த ஆசிரியர் என்பவர் குழந்தை மீது அன்பு கொண்டவராக, புரியும் வகையில் பாடம் நடத்துவராக இருக்க வேண்டும். அவ்வாறாக இருந்தவர் வியாச மகரிஷி. கற்றுத்தரும் ஆசிரியருக்கும், கற்றுக்கொள்ளும் மாணவனுக்கும் சிரமம் இல்லாத வகையில், பாடம் நடத்த வேண்டும். ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் உள்ளனர்; பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள், பகவத் கீதை, மகாபாரதம், புராண கதைகள் என ஒவ்வொரு நிலையிலும், மாணவர்களுக்கு பக்தி கற்றுத்தரப்படுகிறது. இவை அனைத்துமே புரியாத சில மாணவர்களும் இருக்கவே செய்கின்றனர். பக்தி புரியாத கடைநிலை மனிதர்களை, கோவிலுக்கு சென்று, கற்பூரம் ஏற்றி சுவாமி வழிபாடு நடத்து; மனதில் உள்ளதை இறைவனிடம் கொட்டினால், அனைத்தையும் கற்ற பலனும், பக்தியும் கிடைக்கும் என வியாச மகரிஷி சொல்கிறார். உணவை சிறுகுழந்தை ஏற்காமல், சாப்பிட மறுக்கிறது. தாய் என்பவள், குழந்தையிடம் அன்பு காட்டி, அரவணைத்து விளையாட்டு காட்டி, புகட்டுகிறாள். அதுபோல், ஆசிரியர், மாணவர்களிடம் அன்பு காட்டி, அறிவை புகட்ட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். ஆர்.எஸ்.எஸ்., கோவை கோட்ட தலைவர் பழனிசாமி வரவேற்றார்; "பூமா மில்ஸ் உரிமையாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். நகர தலைவர் துரைசாமி நன்றி கூறினார்.