சிவபெருமானுக்கு திருவாதிரை!மகாவிஷ்ணுவுக்குதிருவோணம். அதைப் போல அம்பிகைக்கு பூரம். அதிலும் ஆடிப்பூரம் மிகவும் விசேஷம். இந்நாள், அம்பிகையின்அவதார நாளாகக்கொண்டாடப்படுகிறது. அம்பிகை மசக்கையாகஇருக்கிறாள் என்று சொல்லி, வளைகாப்பு சார்த்தும்வைபவங்களும் நடக்கும்.மழைக்காலத்தின் தொடக்கமான தேவர்களின் இரவுப்பொழுது தட்சிணாயன தொடக்கமான ஆடியில், அம்பிகைக்கு உண்டான பூரத்தன்று விசேஷமானவழிபாடு நடக்கும். காரணம்?தமிழில் ஒரு வாக்கு உண்டு. சும்மா தொண தொணங்காத! சங்கதி இருந்தா செய்! இல்லாட்டி சிவனேன்னு கிட! என்பார்கள். யாராக இருந்தாலும், சக்தி இல்லாவிட்டால் எதுவுமே செய்ய முடியாது.யா தேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேண சம் ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:என ஸ்ரீதேவி மகாத்மியம் கூறுகிறது. அதாவது, எல்லா ஜீவராசிகளிலும் சக்தியின் வடிவமாக இருக்கும் இந்த அம்பிகையைநமஸ்கரிக்கின்றேன், என்பது இதன் பொருள்.அப்படிப்பட்ட அந்த தேவியை அதன்காரணமாகவே, மழைக்காலத் தொடக்கமான ஆடியில் பூரத்தன்று வழிபாடு செய்கிறோம். மழை பெய்யாவிட்டால் மாநிலத்து உயிர்கள் வாழ வழி ஏது?முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் என மாணிக்கவாசகர் திருவாசகத்தில் திருவெம்பாவைப் பாடலில், அம்பிகையின் அருளைப் போல மழை பொழிய வேண்டும் என்கிறார்.அம்பிகையின் அருளுக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம்? ஸ்ரீதேவி பாகவதம் சொல்லும் வரலாறு....துர்கமன் என்ற அசுரன் உயிர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான். நாட்டில் மழை இல்லாமல் வறட்சி நிலவியது. பயிர்பச்சை வாடின. அப்போது முனிவர்கள் அம்பிகையை வேண்டித் துதிக்க அவள் தரிசனம் தந்தாள்.மழை பெய்வது பிறகு! முதலில் இவர்களது பசியைப் போக்கி வாட்டம் தணிக்க வேண்டும் என்று நினைத்து, காய்கனிகளை தன் விரல் மூலமாக வரவழைத்து அருள்புரிந்தாள். அந்நிலையில் அவளுக்கு சாகம்பரி என்ற திருநாமம் உண்டானது. அதன்பின் அம்பிகை, தன் திருமேனி முழுவதும் கண்களாகக் கொண்டு அப்படியே மழையைப் பொழிந்தாள். அவ்வாறு மழை பொழிவித்த அம்பிகையை, மழைக்காலமான ஆடியில் பூர நன்னாளில் சிறப்பாக வழிபடுகிறோம். அம்பிகையின் பூரண அருளால் மேகம் கொட்டட்டும். பூவுலகம் செழிக்கட்டும்.