பதிவு செய்த நாள்
02
ஆக
2014
01:08
மோகனூர்: ராஜநாகலட்சுமி கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, வளைகாப்பு திருவிழா,
கோலாகலமாக நடந்தது. மோகனூர், ராசிபாளையம் மாருதி நகரில், பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும், ஆடி வெள்ளிக்கிழமை வளைகாப்பு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு வளைகாப்பு திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. காலை 8 மணிக்கு அபிஷேகம், 10 மணிக்கு கோ பூஜை, சுமங்கலி மற்றும் கன்னிகா பூஜையும், 11 மணிக்கு சீர் வரிசை வழங்குதல், பகல் 12 மணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கோவிலில் உள்ள, புற்றுக்குள் வளையல் உள்ளிட்ட பூஜை பொருட்களை போட்டு வழிபட்டனர். அதை தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்பட்டது. பின்னர், அனைவருக்கும்
அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, கரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இருந்து, 3,000க்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டு சென்றனர்.