பதிவு செய்த நாள்
05
மார்
2026
08:03
திருப்பூர்: மாசி மகத் தேர்த்திருவிழாவில் நேற்று, முயங்கு பூண்முலை வல்லியம்மை சமேத திருமுருகநாத சுவாமி, தெப்பக்குள நீராழி மண்டபத்தை, 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 28ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 2ம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. வழக்கமாக இருநாட்கள் நடக்கும் தேரோட்டம், சந்திரகிரஹணம் என்பதால், இந்தாண்டு ஒரே நாளில் தேர்கள் நிலைசேர்க்கப்பட்டன. திருவிழாவில் நேற்று, தேப்பத்தேர் உற்சவம் விமரிசையாக நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில், முயங்கு பூண்முலை வல்லியம்மை சமேத திருமுருகநாத சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளினர். முன்னதாக, நீராழி மண்டபத்தில் உள்ள, விநாயகருக்கு மகா அபிேஷகம், அலங்காரபூஜைகள் நடந்தன. அம்மையப்பர், நீராழி மண்டபத்தை, 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தெப்பக்குளக்கரைகளில் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன, வாசனை திரவியம் தெளித்து, தெப்பக்குளத்து தண்ணீரில் மலர்கள் துாவப்பட்டிருந்தன. உற்சவமூர்த்திகள், ஆறு முறை வலம் வரும்வரை, வேதபாராயணம் நடந்தது. அடுத்து ஐந்து முறை வலம் வரும் போது, நாகஸ்வர இன்னிசையுடன் திருமுறை பதிகங்கள் விண்ணப்பம் செய்யப்பட்டன. மகா தீபாராதனையை தொடர்ந்து, திருமுருகநாத சுவாமி, வெள்ளை குதிரை வாகனத்திலும், அம்மன் சிம்மவாகனத்திலும் கோவிலுக்கு திரும்பினர்.