தல்லாகுளம் பெருமாள் கோயில் தெப்பக்குளம் புதுப்பொலிவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2014 11:08
மதுரை : மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தெப்பக்குளம் ரூ.80 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்து அறநிலைய துறையின் கீழ் நிர்வகிக்கப்படும், இக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. தல்லாகுளம் ரோடு- கோகலே ரோட்டை இணைக்கும் வகையில் தெப்பம் அமைந்துஉள்ளது. மாரியம்மன் தெப்பக்குளத்தை அடுத்து அழகர்கோவில் பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளம் பெரியது. மூன்றாவது இடத்தை தல்லாகுளம் தெப்பக்குளம் பிடித்துள்ளது. கழிவுநீர் தேங்கியது: முன்பு பராமரிப்பின்றி, தெப்பக்குளத்துக்குள் கழிவுநீர் திருப்பி விடப்பட்டது. இதனால், தெப்பக்குளத்தை பக்தர்கள் பயன்படுத்துவதை தவிர்த்தனர். தெப்பக்குளத்தை பராமரித்து நிரந்தரமாக தண்ணீர் தேக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, ரூ.80 லட்சம் மதிப்பில் தெப்பக்குளத்தை பராமரிக்கும் பணி துரிதமாக நடக்கிறது. இதை சுற்றிலும் ’பேவர் பிளாக்’ கற்களால் அழகுபடுத்தப்படுகின்றன.
நிலத்தடி நீர் உயரும்: நீர் வரத்து இல்லாததால் தல்லாகுளம் கண்மாயில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு மூடப்பட்டு வருகிறது. தெப்பக்குளம் புதுப்பிக்கப்பட்டு நிரந்தரமாக 45 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கப்படவுள்ளது. அதற்கான நீர்வரத்து கால்வாய்களும் துார்வாரப்பட்டு வருகின்றன. இங்கு தண்ணீர் தேக்கும்போது, அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். தெப்பத்தின் தெற்குப்பகுதியில் சிறுவர் பூங்கா அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு வரவேற்பு குவிகிறது.