பதிவு செய்த நாள்
26
ஆக
2014
12:08
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிறிய மற்றும் பெரிய விநாயகர் சிலைகள், 4,000க்கும் மேற்பட்டவை, பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட உள்ளன. இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்காக, ஆந்திர மாநிலம், மங்களம், பொம்மல் குவார்ட்டர்சிலிருந்து வந்திறங்கியுள்ள நுாற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள், கொசப்பேட்டையில் விற்பனைக்கு காத்திருக்கின்றன. காகிதக் கூழால் செய்யப்பட்ட சிலைகள், இரண்டடி முதல் எட்டடி வரை உள்ளன. இரண்டாயிரம் ரூபாய் முதல் 20ஆயிரம் ரூபாய் வரை தரம் பிரிக்கப்பட்டுள்ளன. மூஞ்சூறு விநாயகர், சிவ நர்த்தன விநாயகர், மான், அன்னம், மயில் மற்றும் சிங்க வாகன விநாயகர், அனுமன், நரசிம்மர், விநாயகர் முகம் கொண்ட மும்முக விநாயகர், சித்தி புத்தி விநாயகர் என, பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் உள்ளன. சவுகார்பேட்டையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட உள்ளன.
களிமண் விநாயகர் சிலை குறித்து, சிலை தயாரிப்பாளர் மணிகண்டன் கூறுகையில், இந்தாண்டு மாதக்கடைசி என்பதால் களிமண் விநாயகர் சிலைக்கு கிராக்கி குறைந்து விட்டது. களிமண் கிடைப்பதும் சிரமமாகி விட்டது. வீட்டு பணிகள் நடந்தால் தான், களிமண் கிடைக்கிறது. களிமண் விநாயகர் சிலைகள் 20 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கிடைக்கின்றன, என்றார். வடமாநிலத்தவர் அதிகம் வாழும் சவுகார்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் விநாயகர் சதுர்த்தி, 10 நாட்கள் கொண்டாடப்படும். அதற்காக ரசாயனம் கலக்காத முழுவதும் களிமண்ணாலான கலை நயத்துடன் கூடிய விநாயகர் சிலைகளை சவுகார்பேட்டையில் வழிபாட்டுக்காக வைப்பது வழக்கம். இதுகுறித்து, சிலை தயாரிப்பாளர் சம்பத் கூறுகையில், இந்தாண்டு 29ம் தேதி பூஜை, பஜனையுடன் விநாயகர் சதுர்த்தி விழா துவங்கும். தொடர்ந்து பத்து நாள் பூஜை, பஜனை மற்றும் பிரசாத வினியோகம் இருக்கும், என்றார்.