உள்ளத்தை துõய்மையாக வைத்துக் கொள்ளாமல், வெறும் தத்துவங்களை எடுத்துச் சொல்லி விவாதம் செய்வதும், பிறரை ஏளனமாகக் கருதுவதும், தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும் விவேகமான செயல் அல்ல. தர்மம் செய்யும் போது கோபம் கொள்வதோ, கடுமையான சொற்களைச் சொல்வதோ பாவம் ஆகும். நாம் கொடுத்த தர்மம் போதாது என்று கேட்கும் போது கூட, சாந்தமான வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைப்பதே சிறந்தது. உயர்ந்த கடவுள் முதல் மண்ணில் நெளியும் புழு வரையிலும் அனைத்து உயிர்களிலும் உயர்வு தாழ்வு கருத வேண்டாம். உண்மையான சாது என்பவன் நட்பு பகை, சுகதுக்கம், இன்பதுன்பம் என எதிரான இரு நிலையிலும் சமநிலை இழக்க மாட்டான். மண்ணில் பிறந்த உயிர்கள் அனைத்தும் முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினைகளை அனுபவித்தே ஆக வேண்டும். அதற்காகவே உடல் கொடுக்கப்பட்டிருக்கிறது. பணக்காரன் வீட்டு நாய் மெத்தையில் உறங்குவதும், ஏழை வீட்டு நாய் குப்பையில் படுத்திருப்பதற்கும் கூட காரணம் முன் செய்த வினைப்பயனே. இன்பமாகத் தெரியும் எதுவும் உண்மையில் இன்பமும் இல்லை. துன்பமாக இருக்கும் எதுவும் உண்மையில் துன்பமும் இல்லை. இரண்டும் எப்போதும் கலந்தே இருக்கும். அறுசுவை விருந்தைச் சாப்பிட்டாலும், கூழோ, ரொட்டியோ சாப்பிட்டாலும் முடிவு தான் என்ன? வயிற்றுப் பசி நீங்குவது ஒன்றே. அவரவர் மனதைப் பொறுத்து அது அது தேவாமிர்தம். இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்வதே புத்திசாலித்தனம். இல்லாததை நீங்கி ஏங்கிக் கொண்டிருந்தால் என்றும் மனதில் அமைதி நிலைக்காது. செல்வவளம் நிறைந்தவர்கள் பணிவான உள்ளத்துடன், ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். பழுத்திருக்கும் மரம் தலைக்கனம் இன்றி தாழ்ந்து வளைந்து நிற்பதைப் பாருங்கள். உலக நடப்புகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்தாலும், ஒருபோதும் கடவுளை மறந்து விடுவது கூடாது. கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் இல்லாத இடம் என்று ஒரு இடமும் கிடையாது. அசைகின்ற, அசையும் எல்லாப் பொருள்களிலுமே கடவுள் நிறைந்திருக்கிறார். மனம் முரட்டுத்தனமானது. அதை எளிதில் அடக்க முடியாது. ஆனால், அதன் தயவு இல்லாமல் கடவுளை அறியவும் முடியாது. நல்லது கெட்டது பார்க்காமல் அமரும் ஈயைப் போல மனதை அதன் போக்கில் விட்டால் கண்டதற்கும் ஆசை கொண்டு அதில் மூழ்கிவிடும். உருவ வழிபாட்டைப் புறக்கணிப்பது கூடாது. மனம் ஒருமுகப்பட அதுவே சிறந்தவழி. கடவுளை உருவத்தில் கண்டு பூஜிக்கும் போது எல்லையில்லா இன்பம் பெருக்கெடுக்கும். நல்லொழுக்கம் இருந்தால் ரோஜாவின் இதழ்களைப் போல் மாறாத வாசனையை அனுபவிக்கும் உணர்வை அனுபவிக்கலாம். எதிரிகளையும் மன்னிக்கும் பக்குவம் இருந்தால் என்றும் மாறாத பாசத்தைக் காட்டலாம். பிறர் அடையும் இன்பம் கண்டு மகிழ்வதைப் போல புண்ணியம் வேறில்லை. பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்வது போல கொடிய தோஷம் வேறில்லை. நோய், வறுமையில் வாடுவோருக்கு உதவி செய்வதன் மூலம் கடவுளின் அன்பிற்கு உரியவராக முடியும்.