காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பிரம்மோத்சவ பந்தகால் முகூர்த்தம்
பதிவு செய்த நாள்
06
பிப் 2026 05:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் முகூர்த்தம் நடந்தது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில், கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவங்கி, 12 நாட்கள் உற்சவம் நடைபெறும். நடப்பாண்டு பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி அதிகாலை, 5:15 மணி முதல், 6:15 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, நேற்று காலை 5:15 மணிக்கு கோவிலில் பந்தகால் முகூர்த்தம் நடந்தது. பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகமும், வேத மந்திரம் ஓதப்பட்டு தீப ஆராதனை நடந்தது. இதில், கோவில் ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் பங்கேற்றனர். பிரம்மோத்சவத்தையொட்டி வரும் 21ம் தேதி முதல், தினமும் காலை, மாலையில், காமாட்சியம்மன் மலர் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார். ஏழாம் நாள், பிரபல வெள்ளி ரதம் உத்சவம் மார்ச் 1ம் தேதி இரவு விமரிசையாக நடக்கிறது. ஏற்பாடுகளை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ஆதீன பரம்பரை கர்த்தாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச ஐயர், கோவில் உதவி ஆணையர், செயல் அலுவலர் ராஜலட்சுமி, கோவில் மணியகாரர் சூரியநாராயணன், கோவில் ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் செய்துள்ளனர். பிரம்மோத்சவம் விபரம்: பிப்.,21 கொடியேற்றம், தங்க மான் வாகனம் பிப்.,22, மகரம் / வெள்ளி சந்திர பிரபை பிப்.,23. தங்க ஸிம்ஹம், யானை பிப்.,24. தங்க சூர்ய பிரபை, தங்க ஹம்ஸம் பிப்.,25, தங்க பல்லக்கு, நாகம் பிப்.,26. முத்து சப்பரம், தங்க கிளி பிப்.,27. ரதம் – பிப்.,28. பத்ரபீடம், குதிரை மார்ச் 1. ஆள்மேல் பல்லக்கு, வெள்ளி ரதம் மார்ச் 2. சரபம், கல்பகோத்யானம் மார்ச் 3. தங்க காமகோடி விமானம் மார்ச் 4. விஸ்வரூப தரிசனம், விடையாற்றி உத்சவம்.
|