பதிவு செய்த நாள்
25
அக்
2014
12:10
நாகப்பட்டினம்: நாகை அருகே பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை விசர்ஜனம் செய்ய புறப்பட்ட சாதுக்கள்,நடுவில் மறித்த ரயில்வே தடுப்பால், சிலைகளை வைத்து ஒன்றரை மாதமாக போராடி வருவது பக்தர்கள் மனதை வேதனையடை வைத்துள்ளது. நாகை அடுத்த வடக்கு பொய்கைநல்லூரில் அமைந்துள்ளது பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பால்மொழி அம்மன் கோவில். சித்தர்கள் இக்கோவிலை உருவாக்கி, தங்கி தவம் புரிந்ததாக ஐதீகம். கடந்த 2009 ம் ஆண்டு நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டப் போது,இக்கோவிலுக்கு செல்லும் வழியின் நடுவே ரயில் பாதை போடப்பட்டது.அப்போது ரயில்வே நிர்வாகத்தினர், கோவிலுக்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் அமைத்தனர். அருகிலேயே மற்றொரு ரயில்வே கேட் உள்ளது.
சில மாதங்களுக்கு முன் பராமரிப்பு செலவு அதிகரிப்பதாக கூறிய ரயில்வே நிர்வாகத்தினர், கேட்டை அப்புறப்படுத்தி விட்டு,சாலையின் குறுக்கே இரும்பு சங்கிலி அமைத்து,கோவில் நிர்வாகத்தினரை பராமரிக்க கூறினர். ரயில்வே கேட்டை கோவிலில் தங்கியிருக்கும் சாதுக்கள் பராமரித்து வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென்று,கோவிலுக்கு செல்லும் வழியில் இருபக்கமும், இரும்பு தூண்களை நட்டு பாதையை ரயில்வே நிர்வாகம் தடுத்துள்ளது.இந்நிலையில் கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை கரைப்பதற்காக,உற்சவர் பால்மொழி அம்மன் திருவுருவத்தோடு,செப்., 5 ம் தேதி கோவிலில் இருந்து சாதுக்கள் புறப்பட்டனர்.ரயில்வே தடுப்பு தூண்களை தாண்டி,சுவாமி சிலைகளை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால்,சாமி சிலைகளை வழியில் இறக்கி வைத்து விட்டு,சாமி சிலைகள் முன் சாதுக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த உள்ளாட்சி தேர்தல் போது சாதுக்களை சந்தித்த இந்து அமைப்பினர், சாதுக்களை அழைத்துச் சென்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்திக்க வைத்தவர்கள்,மத்திய அமைச்சர் பொன்னார்,பிரச்னைக்குரிய இடத்தை வந்து பார்க்க இருப்பதாக உறுதி அளித்துள்ளனர். மத்திய அமைச்சர் வருவார்,பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்,விநாயகர் சிலைக்கு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சாதுக்கள்,மழையில் சாமி திருவுருவங்கள் நனையாமல் பாதுகாக்க படுதாவை கட்டி இரவிலும் அங்கேயே படுத்து உறங்குகின்றனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யாமல் சாதுக்களும் பிடிவாதமாக போராட்டத்தை தொடர்வதும், அரசியல் வாதிகள் நான்கு பேர் நின்று பேராாட்டத்தில் ஈடுபட்டாலே ஓடிவந்து தீர்வு காண முயலும் அரசு இயந்திரமும் கண்டுகொள்ளாமல் இருப்பது,விநாயகர் பக்தர்களையும், ஆன்மிகவாதிகளையும் வேதனைப்பட வைத்துள்ளது.