பதிவு செய்த நாள்
19
நவ
2014
12:11
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் பக்தர்கள் தங்குவதற்கு, அடையாள அட்டை இருந்தால் மட்டுமே, குடில்கள் வாடகைக்கு விடப்படுகிறது. திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமாக, பேருந்து நிலையம் அருகில் தணிகை இல்லம், மலைக்கோவில் செல்லும் காட்ரோட் எதிரில், கார்த்தி கேயன் இல்லம் மற்றும் திருக்குளம் அருகில் சரவணா பொய்கை இல்லம் என, மூன்று இடங்களில் தேவஸ்தான குடில்கள் இயங்கி வருகிறது. இங்கு, பக்தர்கள் தங்குவதற்கு, குளிர்சாதன குடில், சாதாரண குடில் மற்றும் சாதாரண அறைகள் குறைந்த வாடகையில் விடப் படுகிறது. கடந்த மாதம் வரை, பக்தர்கள் பெயர் மற்றும் விலாசம் தெரிவித்து அறை எடுத்து தங்கி வந்தனர். மேலும், வாடகை கட்டணம் புத்தக ரசீது வழங்கப்பட்டு வந்தது. தற்போது, கணினி மூலம் அறைகள், குடில்கள் பதிவு செய்யப்படுகிறது. இதனால், இம்மாதம் முதல், பக்தர்கள் தேவஸ்தான குடில்களில் தங்குவதற்கு, ஓட்டு அளிக்கும், 18 ஆவணங்களில் ஒரு அடையாள அட்டை இருந்தால் தான் அறை பதிவு செய்யப்படுகிறது.
அடையாள அட்டை கொண்டு வராதவர்களுக்கு தேவஸ்தான குடில்களில் அறைகள் வாடகைக்கு கிடைக்காது. இதுகுறித்து, பெயர் வெளியிட விரு ம்பாத கோவில் அலுவலர் ஒருவர் கூறுகையில், தேவஸ்தான அறைகளில் குற்றவாளிகள், திருடன் மற்றும் தவறான காரியங்களில் ஈடுபடுபவர்கள் தான் அதிகளவில் அறைகளை எடுத்து தங்கி வருவதாக தொடர்ந்து கோவில் நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. மேலும், தீவிரவாதிகள் கூட த ங்குவார்கள் என, ஒரு பேச்சு வந்ததை தொடர்ந்து, உண்மையான பக்தர்கள் மற்றும் பயணிகள் தங்குவதற்கு வசதிக்காக தான், தற்போது அடையாள அட்டை மற்றும் கணினி மூலம் அறைகள் பதிவு செய்யப்படுகிறது. இப்படி முக்கிய ஆவணங்கள் கேட்டு பெற்று பதிவு செய்வதால், குற்றவாளிகள் யாரும் இங்கு வரமாட்டார்கள். மேலும் பக்தர்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும் என்றார்.