பதிவு செய்த நாள்
16
டிச
2014
03:12
ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள். மூத்தவனை அழைத்த தந்தை, நமது திராட்சை தோட்டத்தில் அறுவடை பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைக் கண்காணித்து, சேதாரமில்லாமல் பழங்களை கூடைகளில் நிரப்பி குடோனில் கொண்டுவந்து சேர்,”என்றார். அந்த மகன்,எனக்கு வேறு வேலை உள்ளது. தோட்டத்திற்கெல்லாம் செல்ல முடியாது,” என முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறிவிட்டு வெளியேறினார். சிறிது தொலைவு சென்றபின்னர் அவரது மனதில் மாற்றம் ஏற்பட்டது. தந்தையிடம் அவ்வாறு பேசியிருக்கக்கூடாது. எவ்வளவு நம்பிக்கையோடும், பாசத்தோடும் அந்த பணியை நம்மிடம் ஒப்படைக்க முயற்சித்தார். அவரை உதாசீனப்படுத்தி, வார்த்தைகளால் புண்படுத்திவிட்டேனே என வருந்தினார். தோட்டத்திற்கு விரைந்து சென்று, தந்தை கூறிய பணியை மிகுந்த கவனத்துடன் செய்து முடித்தார். மூத்த மகன் தோட்டத்திற்கு சென்றது தந்தைக்கு தெரியாது. வேறு வேலை இருப்பதாக மூத்தவன் கூறியதால், இளையவனை அழைத்து அதே பணியை செய்யுமாறு கூறினார். தந்தை சொல்லை ஏற்ற அந்த மகன் சிறிது தொலைவு சென்றதும், தனது தந்தையை மனதிற்குள் எள்ளி நகையாடினான். நண்பர்களோடு சேர்ந்து பொழுது போக்கச் சென்று விட்டான். இவர்களில் யார் நல்லவர் என இயேசு தனது அருகில் நின்றவர்களிடம் கேட்டார். அவர்கள் அனைவரும் மூத்தமகன் என்றனர். தவறு செய்வது மனித இயல்பு. செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கேட்பதும், மீண்டும் அதே தவறை செய்யாமல் இருப்பதுதான் சிறந்த பண்பாக கருதப்படும். நமது பாவங்களுக்காக வருந்துவோம். இறைவனிடம் மன்னிப்பு கேட்போம்.