பதிவு செய்த நாள்
17
டிச
2014
04:12
அனுமனை வணங்குவதன் பலன்: அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.
கிருஷ்ணனுக்கும் பிரியமானவர்: அனுமன் ராமனுக்கு மட்டுமல்ல! ராமாவதாரத்தை அடுத்து வந்த கிருஷ்ணாவதாரத்தில். அர்ஜீனனின் கொடியில் இருந்தவர் அவர். அவரது முன்னிலையிலேயே. கிருஷ்ணன் கீதையைப் போதித்தார்.
கண் கொடுக்கும் ஆஞ்சநேயர்: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் தேரடியின் கீழ் கண்கொடுக்கும் ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். வெண்பாப்புலி வேலுசாமி பிள்ளை என்பவர் ஆஞ்சநேயபுராணம் என்ற துதிபாடி இழந்த பார்வையை மீண்டும் பெற்றார்.
ஆசியாவின் முதல் நவ ஆஞ்சநேயர் கோயில்: மதுரையிலிருந்து (32 கி.மீ) திண்டுக்கல் செல்லும் 4 வழிப்பாதையில் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் நவ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. கோயில் வாசலில் தெற்கு நோக்கி 23 அடி உயர ஆஞ்சநேயர் சுதை வடிவில் அருள்பாலிக்கிறார். மூலவர் ஜெயவரத ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அவரைச்சுற்றி தெற்கு, மேற்கு, வடக்காக பக்த ஆஞ்சநேயர், பால ஆஞ்சநேயர், பவ்ய ஆஞ்சநேயர், யோக ஆஞ்சநேயர், தியான ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர், பஜன ஆஞ்சநேயர், தீர ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகின்றனர்.
பெருமாள் அருகில் அனுமன்: ராமர் அருகில் மட்டுமல்லாமல் தேனிக்கருகிலுள்ள சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் மூலஸ்தானத்தில் பெருமாள் அருகிலும் அனுமனைத் தரிசிக்கலாம்.
கீதைக்கு உரை எழுதியவர்: கீதைக்கு பலர் உரை எழுதியுள்ளனர். பைசாசம் என்ற மொழியில், ஆஞ்சநேயர் கீதைக்கு பாஷ்யம் (விளக்கவுரை) எழுதியதாகச் சொல்வர்.
இலக்கண பட்டதாரி: சிறந்த கல்விமானான அனுமனை. நவ வ்யாகரண வேத்தா என்பர். அதாவது. அவர் ஒன்பது வகையான இலக்கணத்தையும் படித்தவர். புத்தி, சக்தி இரண்டும் அவரிடம் இருந்தது.
ஒரே சிலையில் மூன்று வடிவம்: உ.பி. கான்பூரிலிருந்து 8 கி.மீ. தூரத்திலுள்ள பங்கி ஆஞ்சநேயர் கோயிலில், காலையில் அனுமன் குழந்தை வடிவிலும், மதியம் இளைஞனாகவும், மாலையில் வீர புருஷராகவும் காட்சி தருகிறார்.
சயன ஆஞ்சநேயர்: மகாராஷ்டிரா, அவுரங்காபாத் மாவட்டத்தில் மரத்வாடா பகுதி குல்தாபாத்தில் உள்ள பத்ர மாருதி கோயிலில் அனுமன் கட்டிலில் படுத்த நிலையில் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
நோயற்ற வாழ்வு அருளும் 32 அடி ஆஞ்சநேயர்: நவக்கிரகத்தில் குரு தலமான ஆலங்குடிக்கு அருகில் உள்ள ஞானபுரியில் 32 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவரது இடுப்பு வஸ்திரத்துக்குள் சஞ்சீவி மலையில் உள்ள நான்கு பிரதான மூலிகைகள் இருப்பது சிறப்பு. இத்தகைய ஆஞ்சநேயரை எவர் ஒருவர் தரிசித்தாலும், எந்த ஒரு வியாதியும் குணமாகி விடும் என்பதே இதன் தாத்பர்யம். சங்கடங்களைப் போக்கி மங்களத்தை அருள்வார் என்கிற அர்த்தத்தில் இவருக்கு ஸ்ரீசங்கட ஹர மங்கள மாருதி என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது
வீரமங்கள ஆஞ்சநேயர்: நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பொரவச்சேரி ராமபத்ர பெருமாள் கோயிலில் னிசன்னதியில் வீரமங்கள ஆஞ்சநேயர். வலது காலைத் கிழக்கு நோக்கி தொங்கவிட்டு இடது காலை திருநள்ளாறை நோக்கி வடக்கு நோக்கி மடித்து வைத்த நிலையில் தரிசனம் தருகிறார். இவரது மார்பில் ராமர் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் மூலஸ்தானத்தில் ராமருக்கு அருகிலும் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் இத்தலத்தின் சிறப்பு. இக்கோயில்தமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த ஏழு ராமர் கோயில்களில் ஐந்தாவது கோயிலாக கருதப்படுகிறது.
சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர்: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி, மேட்டுப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் 20,21.12.2014 ஆகிய இரண்டு தினங்களில் ஹனுமத் ஜெயந்தி வைபவம் நடைபெறுகிறது. 20ம்தேதி காலை 8 மணிக்கு பஞ்ச சூக்த ஹோமம் முதல் , 21ம்தேதி மாலை 6 மணிஞூகு 1008 ஜிலேபி மாலை வஜ்ர அங்கி கவச சேவையுடன் நடைபெறுகிறது.
துஷ்டநிக்ரஹ அனுமன்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டை செல்லும் வழியில் உள்ள சிறு குன்றில் துஷ்ட நிக்ரஹ அனுமான் அருள்பாலிக்கிறார். வலது கை பக்தர்களின் துன்பங்களை அறைந்து விரட்டுவது போல வடிக்கப்பட்டுள்ளது.
ஊருக்கு ஒரு பெயர்: அனுமனை கர்நாடகத்தில் ஹனுமந்தையா, ஆந்திராவில் ஆஞ்சநேயலு, மகாராஷ்டிராவில் மாருதி, சில வட மாநிலங்களில் மகாவீரர் என்று அழைக்கின்றனர்.
கெடாத வடைமாலை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள வீர அழகர் கோயிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் அணிவிக்கும் வடைமாலை நீண்டநாள் கெடுவதில்லை.
வாயைப் பொத்திய ஆஞ்சநேயர்: ராமனின் முன்பு தலையைக் குனிந்து, வாய் பொத்தி, மிகுந்த மரியாதையுடன் உள்ள அனுமன் சிலை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் ராமசாமி கோயிலில் உள்ளது.
ராமநாம மகிமை: ராமநாம சொன்னால் பாவம் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் நலன் பெறுவார்கள். அனுமன் ஓயாமல் ராம நாமம் சொன்னதால் தான், கடலைத் தாண்ட முடிந்தது. முடியாததையும் முடித்து வைப்பது ராம நாமம்.