பதிவு செய்த நாள்
18
டிச
2014
12:12
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் தேருக்கு, 2.60 லட்சம் ரூபாய் மதிப்பில், நேற்றுபுதிதாக சக்கரங்கள் மாற்றப்பட்டன.
காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் பிரம்மோற்சவம், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான, தேரோட்டத்தின்போது, தேரின் முன் சக்கரம் உடைந்தது. பின், தற்காலிகமாக அமைக்கப்பட்ட சக்கரம் கொண்டு, தேர் நிலை நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு நடைபெறும் பிரம்மோற்சவத்தின் தேரோட்டம், சிறப்பாக நடைபெற, புதிய சக்கரங்கள் பொருத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, 2.60 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு புதிய சக்கரங்கள் பொருத்த, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், திருச்சி பெல் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. மூன்றரை டன் எடை கொண்ட, இரண்டு அச்சு மற்றும் நான்கு சக்கரங்கள், இரண்டு நாட்களுக்கு முன், திருச்சியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, நேற்று ராட்சத கிரேன் மூலம், தேரின் பழைய சக்கரங்கள் அகற்றப்பட்டு, புதிய நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. கோவில் பிரம்மோற்வம், அடுத்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.