ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: மேகத்திற்கு தலைவனான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேட்பாயாக. உன்னிடம் இருப்பதை சிறிதும் மறைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகையே ஆள்பவனும், எங்கள் முதல்வனுமான கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிய தோள்களைஉடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னி, வலம்புரி சங்கு போல அதிர்ந்து இடி ஒலி எழுப்பி, வெற்றியைத் தரும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து பாயும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அந்த மழையால் நாங்கள் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக நீர்நிலைகளை நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.
திருவெம்பாவை-பாடல் 4
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந் தெண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். பொருள்: “முத்துப்பல் பெண்ணே! இன்னுமா விடியவில்லை?” என்ற பெண்களிடம், உறங்கியவள், “அதெல்லாம் இருக்கட்டும்! கிளி போல் பேசும் நம் எல்லா தோழியரும் வந்து விட்டார்களா?” என்றாள். அவர்களோ, “அடியே! உன்னை எழுப்ப வந்தவர்கள் எத்தனை பேர் என்பதை பிறகு தான் எண்ண வேண்டும். நாங்கள் விண்ணோருக்கே மருந்தாகவும், வேதப் பொருளாகவும் இருக்கும் சிவனை உள்ளம் உருகிப் பாடுகிறோம். இந்த நேரத்தில் இங்கே வந்துள்ள பெண்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எண்ணிக் கொள். நீ எதிர்பார்க்கும் எண்ணிக்கை இல்லாவிட்டால், மீண்டும் துாங்கு,” என்று கேலி செய்தனர்.