பதிவு செய்த நாள்
19
டிச
2014
10:12
விளக்காக ஒளிர்வோம்!
ஆண்டவர் வகுத்த சட்டதிட்டங்களை முறையாக கடைபிடிக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர். அதன்படி வாழவும் செய்கின்றனர். ஓய்வு நாளன்று கோயிலுக்கு செல்வது, மனம் உருக வேண்டுவது, காணிக்கையை குறைவில்லாமல் செலுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றனர். அதேநேரம் இன்னும் ஒரு சிலர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களை பாராட்ட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நற்செயல்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் அவர்களுக்கு எந்த நன்மையும் விளைவதில்லை. அறச்செயல்கள் எதுவாக இருந்தாலும் உன் வலது கை கொடுப்பது, இடது கைக்கு தெரியக்கூடாது என ஆண்டவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே எதைச் செய்தாலும் அது பிறருக்கு பயனுள்ளதாகவும், நன்மை பயப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதனால்தான் இயேசு, தனது சீடர்களிடம், நீங்கள் உலகிற்கு உப்பாகவும், விளக்காகவும் இருங்கள், என அறிவுறுத்தினார். உப்பில் உவர்ப்பு இருக்கும்வரைதான் அது உணவிற்கு பயன்படும். உவர்ப்பில்லாத உப்பு உரமாக மரங்களின் அடிப்பகுதியில் கொட்டப்படும்.
ஒளி கொடுப்பதற்காக ஏற்றப்படும் விளக்கு எல்லோருக்கும் தெரியும் வகையில் உயரமான இடத்தில் வைக்கப்படும். அப்போதுதான் அதிலிருந்து வெளிப்படும் ஒளி போதுமான வெளிச்சத்தைக் கொடுக்கும். உப்பும், விளக்கும் தனக்காக சேவை செய்வதில்லை. பிறருக்காகனே பயன்படுகின்றன. நமது செயல்கள் உப்பாக, ஒளியாக மனிதர்கள் மத்தியில் வெளிப்படும்போது அதைக் காண்பவர்கள் விண்ணகத் தந்தையை போற்றி புகழ்வார்கள். நாமும் உயர்வாக மதிக்கப்படுவோம்.