மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்கலாம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2014 12:12
மதுரை : மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமாக தெற்குவெளி வீதியில் உள்ள இடம் ஒண்டிப்பிள்ளை அறக்கட்டளைக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆவணி உற்சவ விழா நடத்த இவ்வாறு செய்யப்பட்டது. ஒப்பந்தப்படி வேறு யாருடைய பெயரிலும் சொத்தில் உரிமை மாற்றம் செய்யக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.அந்த இடத்தை இ.எம்.கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர் பெயரில் உரிமை மாற்றத்தை அறக்கட்டளை செய்தது. பின் அவரது வாரிசுகள் பராமரித்து வந்தனர். இடத்தை மீட்க 1970ல் கோவில் நிர்வாகம் மதுரை கூடுதல் சப் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது. கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவாக கீழ் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோபாலகிருஷ்ணன் வாரிசு இ.எம்.ஜி.சவுந்தரராஜன் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதை சீராய்வு செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு செய்தார்.
சவுந்தரராஜன் தரப்பில் சில ஆண்டுகளுக்கு 33 லட்சம் ரூபாய் கோவிலுக்கு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் கோவிலுக்கே இடத்தை ஒப்படைப்பது என இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டதால் வழக்கு முடிவுக்கு வந்தது.ஒப்புக்கொண்டவாறு நிலுவைத் தொகை செலுத்தவில்லை. நிலத்தை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும், என கோவில் நிர்வாகம் கீழ் கோர்ட்டில் மனு செய்தது. சவுந்தரராஜன் இறந்தார். அவரது வாரிசுகள் வழக்கை நடத்தினர். அந்த சொத்தின் பெயரில் அறக்கட்டளை துவக்கினர். அவர்கள், சொத்தை திருப்பி ஒப்படைக்குமாறு அறக்கட்டளை மீதுதான் வழக்குத் தொடர முடியும். தனிநபர் மீது தொடர முடியாது. தாமதமாக நிறைவேறுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, என கீழ் கோர்ட்டில் மனு செய்தனர்.மேலும் அவர்கள், அந்த இடத்தில் 2 சினிமா தியேட்டர்கள் உள்ளன. அறக்கட்டளை சொத்து வருவாய் மூலம் கல்விப் பணி மேற்கொள்கிறோம். ஐகோர்ட்டின் ஒரு உத்தரவின் காரணமாக நிலுவைத் தொகை செலுத்த முடியவில்லை. 31 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யத் தயார், என்றனர். இதை ஏற்று கோவில் நிர்வாகத்தின் மனுவை கீழ் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கோவில் நிர்வாக அலுவலர் ஐகோர்ட்டில் மனு செய்தார்.
நீதிபதி வி.எம்.வேலுமணி விசாரித்தார். மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் சுந்தரேசன், வக்கீல் மனோகர் ஆஜராகினர். நீதிபதி: சொத்தில் உரிமை மாற்றம் செய்தது தவறு. இல்லாத ஒரு சொத்தின் மீது அறக்கட்டளை உருவாக்க முடியாது. பணம் செலுத்துவதற்கு தடையாக இருந்ததாக கூறப்படும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன், பின் எதிர் மனுதாரர்கள் தொகையை செலுத்தியுள்ளனரா? இல்லையா? என்பதை கீழ் கோர்ட் கருத்தில் கொள்ளவில்லை. கீழ் கோர்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.சம்பந்தப்பட்ட இடத்தில் தற்போது கட்டடங்கள் உள்ளன. அங்கு பொதுப்பணித்துறை உதவியுடன் ஆய்வு, மதிப்பீடு செய்ய மூத்த வக்கீல் ஒருவரை கமிஷனராக கீழ் கோர்ட் நியமிக்க வேண்டும். கீழ் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நிலத்தின் மதிப்பீட்டுத் தொகையை கோவில் நிர்வாகம் டெபாசிட் செய்ய வேண்டும். நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பது தொடர்பாக கீழ் கோர்ட் 6 மாதங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.