மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்.
திருப்பாவை-பாடல் 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள் : மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்
வலிமை உடையவனுமான நந்தகோபனின்மருமகளே! வாசம் மிக்ககூந்தலையுடைய நப்பின்னை பிராட்டியே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலிநாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக்கொண்டவளே! உன் கணவனான கண்ணனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அழகிய வளை ஒலிக்க செந்தாமரைக் கையால் வாசல் கதவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழும். திருவெம்பாவை-பாடல் 18
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாேடலோர் எம்பாவாய்.
பொருள் : சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியில் உள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்து விட்டன. அந்தளவு பிரகாசமான திருவடிகளை உடையவர் நம் சிவன். பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் முப்பிரிவாக இருக்கிறார். வானமாகவும், பூமியாகவும், பிற உலகங்களாகவும் திகழ்கிறார். கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பு அணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி. பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.