பதிவு செய்த நாள்
02
ஜன
2015
05:01
ஈரோடு : ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பல்வேறு நகரங்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.
பவானி, கூடுதுறையில், ஸ்ரீவேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, அதிகாலை, 5 மணியளவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பின், கருட சேவையில் உலா வந்த, உற்சவ மூர்த்தியான ஆதிகேசவ பெருமான் காட்சி அருளினார். தவிர, பவானி ஸ்ரீசெல்லியாண்டியம்மன் கோவில், ஸ்ரீபழனியாண்டவர் கோவில், ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில், ஸ்ரீவர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீஎல்லையம்மன் கோவில், காவேரி வீதி பக்த ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது.
*சென்னிமலை, முருங்கத்தொழுவு, கே.ஜி.வலசில் உள்ள அணியரங்க பெருமாள் கோவில், அதிகாலை, 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. அணியரங்க பெருமாள், அலமேலுமங்கை-நாச்சியார் மங்கை சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. வைகுண்ட ஏகாதசி குழு தலைவர் பொன்னுசாமி மற்றும் பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
*தென்முகம் வெள்ளோடு கிராமம், தண்ணீர்பந்தல் வேலம்பாளையம் சுயம்பு கிருஷ்ணப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி மற்றும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, 31ம் தேதி இரவு, பத்து மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, 108 சங்கு பூஜை, சுதர்சன ஹோமம், 108 சங்காபிஷேகம், அதிகாலை, 3 மணிக்கு சிறப்பு அலங்காரம், சொர்க்கவாசல் திறப்பும் நடந்தது.
சென்னிமலை, ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம் பெருமாள் கோவிலிலும் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.
*சத்தியமங்கலம் மணிகூண்டு அருகே உள்ள வேணுகோபால் சுவாமி, திப்புசுல்தான் காலத்தை சேர்ந்தது. இங்கு, பெருமாள் நின்ற கோலத்தில் வேணுகோபால் சுவாமியாகவும், அமர்ந்த கோலத்தில் லட்சுமி நாராயண சுவாமியாகவும், சயன கோலத்தில் ரங்கநாதராகவும் காட்சி தருகிறார்.இக்கோவிலில் உள்ள சொர்க்க வாசல், வடக்கு வாசல் கொண்டது என்பது கூடுதல் சிறப்பாகும்.நேற்று அதிகாலை, ஐந்து மணிக்கு பெருமாள் சுவாமியின் உற்சவரை சப்பரத்தில் வைத்து, சொர்க்க வாசல் வழியாக அழைத்து வந்தனர். பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா என முழங்கியவாறு வணங்கினர்.ஆங்கில ஆண்டு பிறப்பை முன்னிட்டு, பண்ணாரி மாரியம்மன் கோவில், தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவில், பவானீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.