திருக்கனுார்: கூனிச்சம்பட்டு தேவநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டில், ஸ்ரீதேவி பூதேவி சமேத தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 2ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதனையொட்டி, மதியம் 12:00 மணிக்கு மகா ஹோமம், ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, வேதபிரபந்த சாற்றுமறை, மாலை 5:30 மணிக்கு பாராயணமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேவநாத சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடந்து, சுவாமி ஊஞ்சல் உற்சவமும், வீதியுலாவும் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் கூனிச்சம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, தேவநாத சுவாமி திருக்கல்யாண விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.