புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே பாலமுருகன் கோவிலில் மார்கழி மாத கிருத்திகையையொட்டி ஊஞ்சல் மற்றும் திருத்தேர் உற்சவம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் மாதம் தோறும் கிருத்திகையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். நேற்று முன்தினம் மார்கழி மாத கிருத்திகையையொட்டி ஊஞ்சல் உற்சவம் மற்றும் திருத்தேர் வீதியுலா நடந்தது. இரவு 8:00 மணிக்கு பாலமுருகனுக்கு சிற ப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் வலம் வந்தார். பின்னர் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.