சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் நகரத்தார் சமூகத்தின் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் விழா நடந்தது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவ்விழாவை கண்டு மகிழ்ந்தனர். நாட்டரசன்கோட்டையில் நகரத்தார் சார்பில் செவ்வாய் பொங்கல் ஆண்டுதோறும் தை பொங்கலுக்கு அடுத்த செவ்வாய், அல்லது அந்த மாதத்தின் முதல் செவ்வாயன்று கொண்டாடப்படும். கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் முன் இவ்விழா நடக்கும். வெளிநாடு உட்பட எங்கிருந்தாலும் அச்சமூகத்தினர் வந்து விடுவர். குலுக்கல் முறையில் ஒவ்வொரு குடும்பத்திலும் முதல் நாளே புள்ளிகள் (பொங்கலிடும் நபர்) தேர்வு நடக்கும். இவ்வாண்டு செவ்வாய் பொங்கல் விழா நேற்று மாலை நடந்தது. குலுக்கலில் தேர்வான நாட்டரசன்கோட்டை கண்ணப்பன் 5 மணிக்கு பொங்கல் வைத்தார். இதன் பின், பிறர் பொங்கல் வைத்தனர். இம்முறை நகரத்தார் சார்பில், 899 பேரும், 100க்கும் மேற்பட்ட பிற சமூகத்தை சேர்ந்த பெண்களும் பொங்கலிட்டனர்.முன்னதாக பேரூராட்சி சார்பில், சுற்றுலாத்துறை ஏற்பாட்டில் அமெரிக்க, பெல்ஜியம், ஈரான், சிங்கப்பூரை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பாரம்பரிய வழக்கப்படி மேள, தாளம் கிராமிய கலை நிகழ்ச்சியுடன் மாட்டுவண்டிகளில் பொங்கல் திடலுக்கு அழைத்து வந்தனர். பாகனேரியில் நகரத்தார்களின் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் நடைபெற்றது.ராகு காலம் முடிந்த உடன் சரியாக 4.31 மணிக்கு புல்வநாயகியம்மன் கோவில் எதிரே தீபாராதனை நடத்தி 503 அடுப்புகளிலும் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்தனர். முதல் அடுப்பில் பொங்கல் வைத்த வடுகநாதன் செட்டியார் குடும்பத்தினரை வீடுவரை அழைத்து சென்றனர்.