தூத்துக்குடி :திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை (பிப்.,7 ) மூலவர் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, வருஷாபிஷேக விழா நடக்கவுள்ளது.
முருகனில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், ஆண்டுக்கு இரு முறை வருஷாபிஷேக விழா நடக்கும். மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்திலும், கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட தினத்திலும் வருஷாபிஷேகம் நடக்கும்.
தை மாதம் உத்திர நட்சத்திரத்தில் மூலவர் பிதிஷ்டை செய்யப்பட்டார். பிப்., 7 ல் தை உத்தரத்தில் வருஷாபிஷேகம் நடக்கிறது.அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 4.30 க்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 7 மணிக்கு மகா மண்டபத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்ட கும்ப கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. 8.30 லிருந்து 9மணிக்குள் கும்ப கலசங்கள் கோயில் விமானங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, புனித நீர் அபிஷேகம் நடக்கிறது. அதன் பின்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜையும், தீபாரதணையும் நடக்கிறது.
அன்று இரவு சுவாமிக்கு ராக்கால அபிஷேகம் கிடையாது. இரவு 7 மணிக்கு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வாணையுடன் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்து இரவு கோயில் வந்து சேருகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஞானசேகரன், தக்கார் கோட்டை மணிகண்டன் செய்து வருகின்றனர்.