தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோயிலில் 28 ம் ஆண்டு சித்தர் தவபூஜை நடந்தது. இருமுடி விழாவும், 1008 லிட்டர் பாலபிஷேகமும் நடந்தது.
சிந்தலக்கரையில் காளிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. காளிபராசக்தியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், தீபாரதணை நடந்தது. காலை 8 மணிக்கு 42 அடி உயர வெட்காளியம்மன் சிலைக்கு 1008 லிட்டர் பாலபிஷேகம் நடந்தது.
பின் உலக நன்மை வேண்டி மும் மத பிரார்த்தனை நடந்தது. அம்மன் பாலகர் ராமமூர்த்தி சுவாமிகளுக்கு சித்தர் தவ குருபூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இருமுடி தாங்கி சித்தர் பீடத்தில் குரு தரிசனம் நடந்தது. இரவு 8 மணிக்கு சித்தருக்கு, விளக்கு பூஜையும், இன்று காலை (பிப்.,7) குரு பூஜை வழிபாடும் நடக்கிறது.கோயில் திருவிழாவில் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காளி பராசக்தி வார வழிபாட்டு மன்ற பக்தர்கள் செய்திருந்தனர்.