பதிவு செய்த நாள்
07
பிப்
2015
11:02
திருத்தணி:தரணிவராகபுரம் கிராமத்தில், திருத்தணி உற்சவர் முருகப்பெருமான், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து உற்சவர் முருகப்பெருமான், ஆண்டுதோறும், தை மாதத்தில் திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம் கிராமத்தில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதேபோல், நேற்று காலை, 10:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், மலைப்படிகள் வழியாக சரவணப்பொய்கை என்கிற திருக்குளத்தை அடைந்தார்.பின், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில், உற்சவ பெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கிருந்து, தரணிவராகபுரம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் மண்டபத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு, மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து அனைத்து தெருக்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நள்ளிரவில் உற்சவர் பெருமான் தரணிவராகபுரத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் மலைக்கோவிலை வந்தடைந்தார்.முருகர் திருவீதியுலா முன்னிட்டு கிராமம் முழுவதும், வண்ண விளக்கு கள் அலங்கரித்தும், வீதிகளில் வண்ண கோலங்கள் போட்டு முருகப் பெருமானை வரவேற்றனர். மேலும், பெண்கள் வீடுகள் தோறும், உற்சவருக்கு கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.