பதிவு செய்த நாள்
05
மார்
2015
11:03
தமிழகத்தில் மாசி மக திருவிழா நேற்று கோலாகலமாக கொண் டாடப்பட்டது. முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கும்பகோணத்தில்...: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மகாமக திருவிழா நடக்கிறது. மகாமக திருவிழாவுக்கு, ஓராண்டுக்கு முன் வரும் மாசி மகத்தை, இளைய மகாமகம் என, அழைக்கின்றனர். இளைய மகாமக திருவிழாவுக்காக, கும்பகோணம் கும்பேஸ்வரர், சோமேஸ்வரர் ஆகிய கோவில்களில், கடந்த மாதம், 3ம் தேதி பந்தல் கால் முகூர்த்த விழா நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. பின், பந்தல் காலுக்கு அபிஷேகம் செய்து, நடப்பட்டது. கடந்த, 1ம் தேதி காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, ஆதி கும்பேஸ்வரன் கோவிலில், ஆதி கும்பேஸ்வர சுவாமி மற்றும் மங்களாம்பிகை தனித்தனி தேரில் எழுந்தருளினர். இதையடுத்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நேற்று முன்தினம் மாலை, மகாமக குளக்கரையில் காசி விஸ்வநாதர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இளைய மகாமகத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நேற்று நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆதி கும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், யாழ் சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், ஏகாம்பேரஸ்வரர், நாகேஸ்வரர், பாண முனீஸ்வரர் ஆகிய கோவில்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் அம்பாளுடன் புறப்பட்டு, காலை, 10:30 மணி முதல் மகாமகக்குளத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, அஸ்திர தேவருக்கு பல்வேறு அபிஷேகம் செய்து, காலை, 11:55 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி கண்ட பின், குளக்கரையில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, சுவாமியை வழிபட்டனர்.
கோவையில்...: மாசி மகத்தை முன்னிட்டு, கோவை, கோனியம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. நகர வீதிகளில் திருத்தேரில் பவனி வந்த அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.