பதிவு செய்த நாள்
25
மார்
2015
05:03
சபரிமலை: சபரிமலையில் பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்.,3ம் தேதி பம்பையில் ஆராட்டு நடக்கிறது. பங்குனி மாதம் உத்திரம் நாளில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு நடைபெறும் வகையில் சபரிமலையில் பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டு திருவிழாவுக்காக நேற்று மாலை 5.30 மணிக்கு நடை திறந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் ஐயப்பனின் திருநடையில் சமர்ப்பிக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு சுத்திகலச பூஜைகள் நடத்தினார். காலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், நெய்யபிஷேகம், உஷபூஜை போன்றவை நடைபெற்றது. 8.30 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கொடிப்பட்டத்துக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜை நடத்தினார். தொடர்ந்து மேள தாள் முழங்க மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி கொடிப்பட்டத்தை எடுத்து கோயிலை வலம் வந்தார். கொடிமர சுவட்டில் தந்திரி கண்டரரு பூஜைகள் நடத்திய பின்னர் 9.38 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு, சரண கோஷங்கள் முழங்க கொடியேற்றினார். இதை தொடர்ந்து பத்து நாள் திருவிழா தொடங்கியது. இனி வரும் நாட்களில் தினமும் மதியம் உற்சவபலி நடைபெறும். ஏப்.,2ம் தேதி நள்ளிரவில் சரங்குத்தியில் பிரசித்தி பெற்ற பள்ளி வேட்டை நடைபெறும். 3ம் தேதி காலை ஒன்பது மணிக்கு சுவாமி ஆராட்டுக்காக பம்பைக்கு யானை மீது எழுந்தருளுவார். 12 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறும். மாலை மூன்று மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானத்தக்கு புறப்படும். இரவு பத்து மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.