காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவில் நேற்று, வெள்ளி பூத வாகனத்தில் வீதியுலா வந்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின், 3வது நாளான நேற்று, காலை 9:30 மணியளவில், வெள்ளி பூத வாகனத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளி, ராஜவீதிகளில் வலம் வந்தார். சப்பர வாகனத்தில் ஏலவார் குழலியும் விநாயகரும்; வள்ளி, தெய்வானையுடன் முருகனும் தனித்தனி சப்பரங்களில் உலா சென்றனர். இரவு ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி சப்பர வாகனத்திலும்; முருகன் மயில் வாகனத்திலும்; விநாயகர் பெருச்சாளி வாகனத்திலும், சின்ன காஞ்சிபுரம் 3ம் திருவிழா மண்டபத்திற்கு சென்று வந்தனர்.