பதிவு செய்த நாள்
28
மார்
2015
12:03
சத்தியமங்கலம்: வீதி உலா நிகழ்ச்சியின்போது, இக்கரை தத்தப்பள்ளியில் இருந்து, பவானி ஆற்றை பரிசல் மூலம் கடந்து, அக்கரை தத்தப்பள்ளிக்கு பண்ணாரி மாரியம்மன் வந்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் கடந்த, 23ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன், குண்டம் திருவிழா துவங்கியது. கடந்த, 24ம் தேதி இரவு, பண்ணாரி கோவிலில் இருந்து பண்ணாரி மாரியம்மன் வெள்ளிக்கவசத்தில், சப்பரம் மூலம் கிராமங்களுக்கு வீதி உலா புறப்பட்டார். சிங்கரம்பாளையத்தில் துவங்கிய வீதி உலா, புதூர், வெள்ளியம்பாளையம் முடித்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு கொத்தமங்கலம் வழியாக தொட்டம்பாளையம் சென்றது. அங்குள்ள வேணுகோபால் ஸ்வாமி கோவிலில், இரவில் தங்கியது. நேற்று மதியம் தொட்டம்பாளையத்தில் இருந்து பண்ணாரி மாரியம்மன், வெள்ளியம்பாளையம் புதூருக்கு வந்தது. இங்கிருந்து, இக்கரை தத்தப்பள்ளி கிராமத்துக்கு வந்து, அப்பகுதி மக்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை, 6 மணிக்கு மேல் பரிசல் மூலம், பவானி ஆற்றை கடந்து, இக்கரை தத்தப்பள்ளியில் இருந்து அக்கரை தத்தப்பள்ளிக்கு சென்றது. அப்போது இரு பக்கத்திலும் உள்ள கரைகளில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் நின்று, கை கூப்பி "மாரியம்மா, மாரியம்மா என விண்ணை முட்டுமளவு கோஷமிட்டு, பரவசப்பட்டனர். நேற்று இரவு அக்கரை தத்தப்பள்ளி மாரியம்மன் கோவிலில் தங்கியது. இன்று, உத்தண்டியூர், அய்யன்சாலை, ரமாபுரம், தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர், திருவள்ளுவர் நகர் வழியாக இரவு, சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டுமாரியம்மன் கோவிலில் வந்து தங்குகிறது.