பதிவு செய்த நாள்
01
ஏப்
2015
02:04
புதுச்சேரி: தொள்ளைக்காது சித்தர் சுவாமிகள் என்று அழைக்கப்படும் மொரட்டாண்டி சித்தர், புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் தங்கியிருந்து, மணக்குள விநாயகரை தினமும் வணங்கி, பல தொண்டுகள் செய்து வந்தார். ஊரார், உறவுகளை பிரிந்து ஆண்டியாக புதுச்சேரி வந்தவர், தனியாக வாழ்ந்தார். அப்போது, மணக்குள விநாயகர் மீது ஈர்ப்பு கொண்டு தினமும் காலையில் வணங்கி வந்தார். தொள்ளைக்காது சித்தரின் வேண்டுகோளை ஏற்று, அவர் இயற்கை எய்திய பிறகு, விநாயகர் கோவிலுக்கு அருகிலேயே குளக்கரையில் அடக்கம் செய்துள்ளனர்.
ஆசிரம அன்னையின் தாராளம்: மணக்குள விநாயகர் கோவிலின் தென்புற சுற்றுப்பிரகாரம் சிறியதாக இருந்ததால், உற்சவ காலங்களில் சுவாமி பிரகார வலம் வருவதற்கும், பொதுமக்கள் வலம் வருவதற்கும் போதுமானதாக இல்லை. அதற்காக, கோவிலை தென்புறத்தில் விரிவுபடுத்த, அருகில் உள்ள ஆசிரம இடத்தை பெறுவதற்காக முயற்சி செய்தனர். ஆனால், கிடைக்கவில்லை.இந்நிலையில், ஆசிரம அன்னையின் கணவில் விநாயகர் தோன்றியதால், தாமாகவே முன்வந்து, 1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி, 106. 58 சதுர மீட்டர் இடத்தை தானமாக கோவிலுக்கு வழங்கினார். அந்த இடத்தில் மண்டபம் கட்டப்பட்டதுடன், விநாயகர், முருகர் சன்னிதிகளும் அமைக்கப்பட்டன. சுவற்றில் விநாயகரின் சோடச உருவங்களும், வடப்புற சுவரில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளின் விளக்க உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.